தமிழர்களுக்காக சிறு துரும்பைக்கூட கிள்ளிப் போடாதவர் ப.சிதம்பரம்: பாஜக
மதுரை: உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தமிழர்களுக்காக சிறு துரும்பைக்கூட கிள்ளிப்போடாதவர் என்றும், மத்திய அரசு கோமாவில் உள்ளது என்றும் பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, பாஜக மாநில மாநாடு வரும் ஏப்ரல் மாதம் 28,29 ஆகிய தேதிகளில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் நடக்கவிருக்கிறது. தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் முல்லைப் பெரியாறு பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்த்தது தவறு. போராட்டங்களால் கோமாவில் இருக்கும் மத்திய அரசை எழுப்ப முடியாது.
மத்திய அரசு வரும் 2014ம் ஆண்டு வரை தாக்குபிடிக்குமா அல்லது கவிழுமா என்ற நிலை உள்ளது. பிரதமர் ஒன்றும் மக்கள் நலனுக்காக தமிழகம் வரவில்லை. அவர் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் நலனுக்காகத் தான் வந்தார். சிதம்பரம் தமிழர்கள் நலனைக் கருதி ஒரு சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போடாதவர். ஹஜ் செல்ல முஸ்லிம்களுக்கும், ஜெருசலம் செல்ல கிறிஸ்தவர்களுக்கும் சலுகை வழங்கியது போன்று கயிலாயம், பத்ரிநாத், கேத்ரிநாத், காசி, ராமேஸ்வரம் செல்ல இந்துக்களுக்கு சலுகை வழங்க வேண்டும்.
மதுரையில் பாஜக மூத்த தலைவர் அத்வானி செல்லவிருந்த பாதையில் வெடிகுண்டு எடுக்கப்பட்ட வழக்கு விசாரணை திருப்தியாக இல்லை. உண்மைக் குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும். மதுரைக்கு மீனாட்சி அம்மன் கோவிலால் தான் பெருமையே தவிர மேயரால் அல்ல. விதிகளை மீறி கோவிலைச் சுற்றி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்க வேண்டும். அந்த கட்டிடங்களை இடிக்க தடை செய்யும் வகையில் மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியிருந்தால் அது கண்டிக்கத்தக்கதாகும் என்றார்.












Click it and Unblock the Notifications