முல்லைப் பெரியாறு அணை: கடையடைப்பு, உண்ணாவிரதம்
நெல்லை: முல்லைப் பெரியாறு அணைப்பிரச்சினையில் கேரள அரசின் நடவடிக்கையினைக் கண்டித்து, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினையால் இரு மாநிலங்களிடையே பதற்றம் தணிந்துள்ள நிலையிலும் போராட்டங்கள் ஓயவில்லை. கேரள அரசைக் கண்டித்து தென்காசியில் வர்த்தகச் சங்கம் சார்பில் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. நகர் முழுவதும் சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை அடைக்கப்பட்டிருந்தன. மருந்துக் கடைகள் மற்றும் ஒருசில டீ கடைகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன. சங்கரன்கோவில் அருகேயுள்ள வன்னிக்கோனேந்தலில் ஆட்டோ, வேன், மினி லாரி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயங்கவில்லை.
கடையநல்லூர் அருகேயுள்ள இடைகால் வர்த்தகச் சங்கம் விடுத்த அழைப்பை ஏற்று இப்பகுதியிலுள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் கடைவீதி வெறிச்சோடிக் காணப்பட்டது. இடைகால் பகுதியில் ஆட்டோக்களும் இயங்கவில்லை. ஆட்டோக்களின் வேலைநிறுத்தம் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
உண்ணா விரதம்
கடையம், வீரவநல்லூர் ஆகிய ஊர்களில் வியாபாரிகள் சங்கம், கார், வேன், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் பஸ் நிலையம் அருகில் உண்ணாவிரதம் நடைபெற்றது. இதையொட்டி நகரில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கார், வேன், ஆட்டோக்கள் எதுவும் இயக்கப்பட வில்லை. வள்ளியூர், தெற்கு கள்ளிகுளம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வேன், கார், ஆட்டோக்கள் இயங்கவில்லை.












Click it and Unblock the Notifications