முல்லைப் பெரியாறு விவகாரம்: தேனி அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
தேனி: முல்லைப் பெரியாறு விவகாரம் காரணமாக தேனி அருகே வாலிபர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக தேனி மாவட்டம் உள்பட மாநிலத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றன. சிலர் மனமுடைந்து தற்கொலையும் செய்து கொள்கின்றனர்.
இந்நிலையில் தேனி அருகே உள்ள சின்னமனூரைச் சேர்ந்த ராமமூர்த்தி(35) என்பவர் முல்லைப் பெரியாறு விவகாரம் காரணமாக விஷம் குடித்தார். உயிருக்குப் போராடிய அவரை சிகிச்சைக்காக தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிர் இழந்தார். இதேபோன்று கடந்த வாரம் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கார் டிரைவர் ஜெயப்பிரகாஷ் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.மேலும் தேனி அருகே உள்ள சீலையம்பட்டியைச் சேர்ந்த இடிமுழக்கம் சேகர் என்பவரும் விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
நேற்று மதுரையில் வழக்கறிஞர்கள் இருவர் உயரமான கட்டிட உச்சியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றனர். அப்போது அவர்களை மதுரை கலெக்டர் சகாயம் சமாதானப்படுத்தி தற்கொலை முயற்சியை கைவிடச் செய்தார்.
முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும், யாரும் தற்கொலை முயற்சியில் ஈடுபடக் கூடாது என்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளன.