குமரிக்கு பதில் கோவளத்தில் அணு உலை எதிர்ப்பு மாநாடு
கூடங்குளம்: மக்கள் இயக்கம் சார்பில் நாளை நடக்கவிருக்கும் மாநாடு குமரிக்கு பதில் கோவளத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் அணு உலை எதிர்ப்பு மாநாடு நாளை(29ம் தேதி) கன்னியாகுமரியில் உள்ள அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மாநாடு நடக்குமிடம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி மாநாடு குமரிக்கு பதில் கோவளத்தில் உள்ள சிறுவர்பூங்கா மைதானத்தில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது,
அணு உலை எதிர்ப்பு மாநாடு குமரிக்கு பதில் நாளை கோவளத்தில் நடக்கவிருக்கிறது. மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியான அறிவரங்கத்தில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம் பேசுகிறார்.
மாநாட்டில் பாமக சார்பில் ஜி.கே.மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன், மதிமுக சார்பில் நாஞ்சில் சம்பத், வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன், கொளத்தூர் மணி மற்றும் சமூக சேவகர்கள் கலந்து கொள்கின்றனர்.
கூடங்குளம் போராட்டம் நீர்த்துப் போய்விட்டதாக சிலர் கூறுகிறார்கள். ஆனால் 137 நாட்களாக போராட்டம் நீடித்து வருகிறது. மத்திய அரசு மக்கள் உணர்வுக்கும், நலனுக்கும் எந்த முக்கியத்துவமும் அளிக்கவில்லை. ஆனால் தமிழக அரசு கூடங்குளம் மக்களின் உணர்வுக்கு ஆதரவாக உள்ளது.
பிரதமரை சந்தித்த முதல்வர் ஜெயலலிதா மாற்று முறை மின்சார தயாரிப்புக்கான 6 செயல் முறை திட்டம் குறித்த மனுவை அளித்துள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications