பைனான்சியர் குடும்பத்தை சேர்ந்த 5 வயது சிறுமி உட்பட 3 பேர் கழுத்து நெரித்து கொலை
கரூர்: கரூரில் பைனான்சியர் குடும்பத்தை சேர்ந்த 5 வயது சிறுமி உட்பட 3 பேரை கழுத்தை நெரித்து கொலை செய்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கரூர் மாவட்டம் வெண்ணெய்மலை பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (54). இவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி கல்யாணி (47). இவர்களுக்கு உமா (27), கலையரசி(22) என்ற 2 மகள்கள் இருந்தனர்.
இதில் உமாவுக்கும், சிதம்பரத்தில் பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றி வரும் பூபதி என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணமாகி, தாரணிகா (5) என்ற மகள் உள்ளார். தற்போது அரையாண்டு விடுமுறை என்பதால் தாரணிகா, தனது பாட்டி கல்யாணியின் வீட்டில் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை உமா, தாய் கல்யாணிக்கு போன் செய்தும் யாரும் எடுக்கவில்லை. இதில் சந்தேகமடைந்த உமா, தனது கணவர் பூபதியுடன் வெண்ணெய்மலையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்தார்.
வீட்டின் உள்ளே பார்த்த போது, கல்யாணி, கலையரசி, தாரணிகா ஆகிய 3 பேரும் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தனர். மேலும் கொலை செய்யப்பட்டவர்களின் கழுத்தில் கிடந்த 25 பவுன் மதிப்புள்ள நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் போலீஸ் மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அந்த நாய் சம்பவ இடத்தில் இருந்து 1 கி.மீ. தூரம் வரை சென்று அங்கே நின்றுவிட்டது.
போலீசார் 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த வெண்ணெய்மலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications