ஜன 5ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்- தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சென்னை: தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5 ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஆர்டிஓ, தாலுகா அலுவலகங்களில் பொது மக்கள் பார்வையிடலாம் என தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் 1.1.2012 தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க கடந்த அக் மாதம் 24ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் 1.1.2012 அன்று 18 வயது நிரம்பியவர்கள் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பித்தனர்.
நெல்லையில் 1 லட்சம் மனு
அரசு ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்களின் நலன் கருதி விடுமுறை நாளான ஞாயிற்று கிழமைகளில் அந்தந்த வாக்கு சவாடிகளில் சிறப்பு முகாம் நடந்தது. தாலுகா அலுவலகங்களிலும் பெயர் சேர்க்க மனு அளித்தனர். நவ 8ம் தேதி வரை பெயர் சேர்க்க மனுக்கள் பெறப்பட்டன. வட மாவட்டங்களில் மழை, வெள்ளம் காரணமாக வாக்காளர் பெயர் சேர்க்க நவ 11ம் தேதி வரை கூடுதலாக மூன்று நாட்கள் அவசாகம் கொடுக்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மனு அளித்தனர்.
ஜனவரி 5 ல் வெளியீடு
இவ்வாறு பெறப்பட்ட வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பான மனுக்கள் கம்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு வாக்குசாவடி நிலை அலுவலர் மூலம் வீடு வீடாக சென்று 100 சதவீதம் விசாரணை செய்யப்பட்டது. விசாரணை முடிந்த பின்னர் அந்தந்த தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலர்கள் வாக்காளர் பெயர் சேர்ப்பது தொடர்பாக இறுதி ஆணை பிறப்பித்தனர். ஜன 5ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது. இதை தாலுகா அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வையிடலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.