தானே புயல்- கனமழை எதிரொலி: தமிழகத்தில் இதுவரை 4 பேர் பலி- வெள்ளக்காடானது கடலூர்
கடலூர்: தானே புயல் எதிரொலியாக, கடலூர், விழுப்புரம், சென்னை மாவட்டங்களில் பேய் மழை கொட்டித் தீர்த்தது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் இந்த மாவட்டங்களின் பல பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளன.
கடலூர், விழுப்புரம் ஆகிய இரு மாவட்டங்களும் முற்றிலும் ஸ்தம்பித்துள்ளன. இங்கு பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் இல்லை.
கடலூரில் மணிக்கு 87 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காறறுடன் மழை பெய்தது. மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடலூரின் பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மீட்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
புதுச்சேரி-மரக்காணம் பகுதியில் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. மரம் விழுந்ததில் மரக்காணம் காவல்நிலையம் சேதமடைந்துள்ளது.
சிதம்பரம் கடலூர் இடையேயான 40 கிமீ சாலையில் பெரும்பலான இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. சிதம்பரம் கடலூர் சாலையில் பேருந்து உள்பட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. பலத்த காற்றால் கடலூரில் பெரும்பாலான இடங்களில் வீடுகளின் மேற்கூரை பறந்தது. காலை 8.30 மணி நிலவரப்படி கடலூர் மாவட்டத்தில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம்
கடலூர் மாவட்டத்தில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் காற்று கடுமையாக வீசி வருவதால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெளியில் நடமாட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
விழுப்புரத்தில் 2 பேர் பலி
விழுப்புரம் மாவட்டத்தில் இரவு முதல் பலத்த காற்று வீசி வருகிறது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் பல இடங்களில் செல்போன் டவர் மற்றும் மரங்கள் அடியோடு சாலையில் விழுந்துள்ளன. இதனால் விழுப்புரம் புதுச்சேரி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இரவு முதல் மின்சாரம் தடைபட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே மாடுடன் சென்று கொண்டிருந்த குருவப்பன் நாயுடு என்பவர் மின்சாரம் தாக்கி பலியானார். மாடும் இறந்தது. கிழக்கு கடற்சாலை பகுதியில் உள்ள கோட்டகுப்பம் பகுதியை சேர்ந்த சுகந்தி என்பவர் மரம் விழுந்து பலியானார்
இந்தப் பகுதிகளில் அதிகாரிகள் முகாமிட்டு தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். கிழக்குக் கடற்கரை சாலை பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும், விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் சாலையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் விடிய விடிய மழை
புயல் எதிரொலியாக சென்னையும் வெள்ளக்காடாகியுள்ளது. விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தலைநகரின் பல பகுதிகளிலும் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
மீனம்பாக்கத்தில் அதிக அளவாக 7 செமீ மழையும், நுங்கம்பாக்கத்தில் 6 செமீ மழையும் பெய்துள்ளது.












Click it and Unblock the Notifications