சென்னையில் 9ம் எண் புயல் எச்சரிக்கை: விடிய விடிய மழை- விமானங்கள் ரத்து
சென்னை: தானே புயல் காரணமாக சென்னையில் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. சென்னையில் 9ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.
புதுவை, கடலூரில் 10ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு 8 மணி முதல் கன மழை பெய்து வருகிறது. கடும் காற்றும் வீசி வருகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்படடுள்ளது.
தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருக்கும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, பொதிகை விரைவு ரயில் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் தாமதமாக வந்து கொண்டிருக்கின்றன.
கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏறி நிரம்பிவிட்டது. இதையடுத்து அதிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
சென்னை ரயில்கள், விமானங்கள் ரத்து:
புயல் சென்னை எழும்பூரில் இருந்து வெளியூர் செல்லும் ரயில்கள் சில ரத்து செய்யப்பட்டன.
மேலும், கோலாலம்பூர், சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு:
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இரவு தொடங்கிய மழை காலையிலும் தொடர்ந்து பெய்து வருகிறது. கடும் காற்று வீசுவதால் மரங்கள் முறிந்து விழுந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் சாலையோரம் தூக்கி வீசப்பட்டுள்ளன.
திருவொற்றியூர் குப்பம், எர்ணாவூர் பாரதிநகர், மேட்டுக்குப்பம், அன்னை சிவகாமி நகர், பெரியகுப்பம், சின்னக்குப்பம் உள்ளிட்ட 24 மீனவ கிராமங்களில் இருந்து 2,000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மீனவ கிராமங்கள் அனைத்திலும் கடல் நீர் ஊருக்குள் புகுந்துள்ளது.
இதனால் கடற்கரை யோரம் முழுவதும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச் சோடி காணப்பட்டது. மெரினா கடற்கரை பட்டினப்பாக்கம், பெசன்ட்நகர் உள்ளிட்ட கடலோர பகுதிகள் அனைத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடற்கரை பகுதிக்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை.
திருவொற்றியூர், நெட் டுக்குப்பம், தாளங்குப்பம் பகுதி மீனவர்கள் நள்ளிரவு 1 மணி அளவில் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
பெசன்ட் நகரை அடுத்துள்ள ஓடக்குப்பம், ஓடமா நகர் பகுதியில் 60 வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. இதையடுத்து சுமார் 200க்கும் மேற்பட்டோர் வீடுகளை காலி செய்து அருகில் உள்ள கோவில்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
படகுகள் சேதம்:
புயல் காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான படகுகளும் சேதமடைந்துள்ளன.