பள்ளி மாணவி குளிப்பதை படம் பிடித்து மிரட்டி தற்கொலைக்கு தூண்டிய 2 பேர் கைது
காஞ்சிபுரம்: குளிக்கும் போது ஆபாசப் படம் எடுத்து மிரட்டியதால், மனமுடைந்த பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பள்ளி மாணவர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த காந்தி நகரை சேர்ந்த மரியதாஸ் மகள் தீபிகா(15). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 26ம் தேதி தீபிகா வீட்டில் குளித்து கொண்டிருந்த போது, அதே பகுதியை சேர்ந்த +2 மாணவரும், அவரது நண்பரும் மொபைல்போன் மூலம் படம் பிடித்தனர்.
அதன்பிறகு அந்த ஆபாசப் படத்தை காட்டி தீபிகா மற்றும் அவரது குடும்பத்தினரை மிரட்டினர். அதில் மனமுடைந்த தீபிகா கடந்த 27ம் தேதி அவரது வீ்ட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தீபிகாவின் தந்தை மரியதாஸ், மதுராந்தகம் போலீசாரிடம் புகார் அளித்தார்.
அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது,
எனக்கும், எனது உறவினர் வித்யாசாகருக்கும் இடையே வீட்டுமனையில் சில பிரச்சனைகள் இருந்தது. இந்த பிரச்னையில் என்னை பணிய வைப்பதற்காக வித்யாசாகரின் நண்பர்களான இதே ஊரை சேர்ந்த 2 மாணவர்கள் எனது மகள் தீபிகா குளிக்கும் போது செல்போனில் படம் எடுத்து மிரட்டினர்.
செல்போனில் உள்ள தீபிகாவின் படத்தை ஊர் முழுவதும் போட்டு காட்டி, இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி உள்ளனர். இதனால் அவமானம் அடைந்த தீபிகா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பரந்தாமன், செல்வநாதன் உள்ளிட்டோர் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஆபாச படம் எடுத்த வினோத், அவரது நண்பர் இளையராஜா உள்ளி்ட்ட 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையி்ல் கைது செய்யப்பட்ட 2 பேரும் பள்ளி மாணவியை ஆபாசமாக படம் எடுத்ததை ஒத்துக் கொண்டனர்.