பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மறுவாழ்வுத் திட்டம்: தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கோரிக்கை
சென்னை: 'தானே' புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து மறுவாழ்வுத் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
'தானே' புயலால் புதுச்சேரி மாநிலமும் மற்றும் தமிழகத்தின் கடலூர் மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உயிர்ச்சேதமும், கணக்கிலிட முடியாத அளவில் பொருள் சேதமும் ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு நிவாரணப் பணிகளை துரிதமாக முடுக்கிவிட்டுள்ளது. இடைக்கால நிவாரண நிதி குறித்த அறிக்கையை தமிழக அரசும், புதுச்சேரி அரசும் தந்தால் உடனடியாக இடைக்கால நிவாரண உதவி அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
எனவே இடைக்கால நிவாரணம் மட்டுமின்றி, நிரந்தரமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயப் பெருமக்களுக்கு எந்த வகையில் உதவிக்கரம் நீட்டலாம் என்பதை மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து செயலாற்றி தீர்வு காண வேண்டும்.
புயலில் முந்திரி மட்டும் அழிந்தால் அடுத்த ஆண்டு விளையலாம். ஆனால் முந்திரி செடியே அழிந்துள்ளதால் விவசாயிகள் மிகப் பெரிய பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். எனவே விவசாயிகளுக்கான மறுவாழ்வுத் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் உருவாக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications