விசைத்தறி தொழிலாளர்கள் இன்று சாலை மறியல்
சங்கரன்கோவில்: ஊதிய உயர்வு, விடுப்பு சம்பளம் உள்ளி்ட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கரன்கோவிலில் 8வது நாளாக தொடர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் இன்று சாலை மறியல் போராட்டம் நடத்துக்கின்றனர்.
சங்கரன்கோவிலில் 6,000க்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் 10,000 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுககு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு மற்றும் விடுப்பு சம்பளம் ஆகியவை உயர்த்தப்படும். கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி விசைத்தறி உரி்மையாளர்களுடன் செய்த ஒப்பந்தம் 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுதது 75 சதவீத ஊதிய உயர்வு, ரூ.150 விடுமுறை சம்பளம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப் போவதாக விசைத்தறி தொழிலாளர்கள் அறிவித்தனர்.
அதன்பேரில் கடந்த நவம்பர் மாதம் 24ம் தேதி மாவட்ட தொழிலாளர் நல அலுவலகத்தில் விசைத்தறி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் தோல்வியில் முடிந்தது. மீண்டும் டிசம்பர் 2ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையை விசைத்தறி உரிமையாளர்கள் புறக்கணித்தனர். இதை கண்டித்து விசைத்தறி தொழிலாளர்கள் டிசம்பர் 14ம் தேதி திருவேங்கடம் சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் 20ம் தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதோடு, ஊர்வலமாக சென்று சங்கரன்கோவில் தாசில்தாரிடம் மனு கொடுத்தனர்.
அதன்பின்னர் சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் கடந்த மாதம் 23ம் தேதி மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து கடந்த மாதம் 26ம் தேதி முதல் விசைத்தறி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர். டிசம்பர் மாதம் 26, 28, 31 ஆகிய தேதிகளில் விசைத்தறி உரிமையாளர்களுடன் 3 கட்டமாக நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் தமிழக கைத்தறி துறை அமைச்சர் சுந்தர்ராஜன் கடந்த வாரம் சங்கரன்கோவில் கைத்தறி கூட்டுறவு சங்கத்திற்கு வந்து ஆய்வு செய்தார். சங்கரநாராயணசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர் தங்களையும் சந்தித்து குறைகளை கேட்டறிவார் என்று நம்பிக்கையுடன் விசைத்தறி தொழிலாளர்கள் காத்திருந்தனர். ஆனால் அவர்களை சந்திக்காமலேயே சென்றுவிட்டார். இதனால் விசைத்தறி தொழிலாளர்கள் இன்று சங்கரன்கோவில பஸ் நிலையம் எதிரே சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். 8வது நாளாக தொடரும் வேலை நிறுத்தத்தால் ரூ.7 கோடி ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications