'தானே' புயல்-புதுவைக்கு ரூ.2,500 கோடி நிதியுதவி கேட்டு மத்திய அரசிடம் அறிக்கை

இதை நேரடியாக மத்திய அரசை அணுகி கேட்க முதல்வர் ரங்கசாமி டெல்லி செல்கிறார்.
'தானே' புயல் புதுச்சேரியில் கரையை கடந்த போது பெரும் நாசத்தை ஏற்படுத்தியது. அப்போது 10 பேர் பலியாகினர். மேலும் நெல் வாழை, கரும்பு உட்பட சுமார் 20,000 ஹெக்டேர் பயிர்கள் சேதமாகி உள்ளது. சாலைகள், வீடுகள் இடிந்து மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் புதுச்சேரியில் ஏற்பட்ட புயல் சேதம் குறித்த விவரங்களை மாநில அரசின் பல்வேறு துறைகள் இணைந்து முதல் கட்டமாக மதிப்பீடு செய்துள்ளனர். தற்போது மாநிலத்தில் நிலவி வரும் தேவைக்கேற்ப, இடைக்கால அறிக்கையை ஒன்றை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் ரூ.2500 கோடி புயல் நிவாரணம் கேட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த அறிக்கையை பரிசீலித்து நிதியுதவியை விரைந்து அளிக்க வலியுறுத்தி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி விரைவில் டெல்லி செல்ல உள்ளார். அப்போது பிரதமர் மன்மோகன்சிங், மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து சேத நிலவரம் குறித்து தெரிவித்து நிதியுதவி கேட்க உள்ளார்.
மாநிலத்தில் புயலில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உதவும் வகையில், அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.2,000 வீதம் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் மீனவ சங்கங்களில் பதிவு செய்துள்ள மீனவர்களுக்கு கூடுதலாக ரூ.1800 வழங்கப்பட்டுள்ளது.
மேலும் புயலில் சேதம் அடைந்த வீடுகளையும், படகுகளையும் கணக்கெடுக்கும் பணியை விரைவில் துவக்குமாறு முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். அந்த கணக்கெடுப்புக்கு பிறகு சேத மதிப்பிற்கு ஏற்ப நிவாரணம் வழங்கப்படலாம் என்று தெரிகிறது.
அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு
தானே புயல் புதுவையை புரட்டிப் போட்டுள்ளதால் நாளை துவங்குவதாக இருந்த அரையாண்டுத் தேர்வுகளை ஒத்திவைத்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும்ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் வரும் 18ம் தேதி துவங்கும் என்றும் அது அறிவித்துள்ளது.
புகைப்படம் நன்றி: முனைவர் மு.இளங்கோவன்












Click it and Unblock the Notifications