ஆமையுடன் தமிழக அரசு போட்டி.. நிவாரணப் பணிகள் குறித்து விஜயகாந்த் பேட்டி!
பண்ருட்டி: கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் புயல் நிவாரணப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாகவும், இந்தப் பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிமுகவைச் சேர்ந்த எம்பி, எம்எல்ஏக்கள் நேரில் வந்து பார்வையிடவில்லை என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில், தானே புயலால் கணக்கிட முடியாத அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. எல்லா இடத்திலும் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. இவற்றை சரி செய்யவே 6 மாதங்கள் ஆகும். ஆனால், ஆமை வேகத்தில் பணி நடப்பதாக மக்கள் கூறுகின்றனர்.
கூரை வீடுகள் காற்றில் பறந்துவிட்டன. பலா, முந்திரி, தென்னை தோப்புகளும் விவசாய நிலங்களும் பாழாகிவிட்டன. மாணவர்களின் பாடப் புத்தகங்கள் புயலில் பறந்துவிட்டன. விவசாயிகள் நொந்துபோய் உள்ளனர்.
அதிகாரிகளை அழைத்து கூட்டம் போட்டு எதுவும் செய்ய முடியாது. தரைவழியாக வந்து பார்வையிட்டால்தான் மக்களின் கஷ்டம் புரியும் (முதல்வர் ஜெயலலிதாவை சொல்கிறார்).
ரேஷன் கார்ட் இருந்தால்தான் நிவாரண உதவிபெற முடியும் என்று கூறுகின்றனர். இது தவறு.
5 ஜெனரேட்டர்கள், 10 லட்சம் நிதி உதவி, மெழுகுவர்த்திகள், வேஷ்டி- சேலைகள் என பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனி நபராக நானே இவ்வளவு உதவிகளை செய்துள்ளேன். ஆனால் அரசு ஏன் இதைச் செய்ய மறுக்கிறது?.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அரசு அதிகாரிகள் யாரும் வரவில்லை என்று மக்கள் கூறுகிறார்கள். எம்பி, எம்எல்ஏக்கள் கூட பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடவில்லை. அவர்கள் மக்களை சந்திப்பதற்கு பயப்படுகின்றனர் என்றார்.












Click it and Unblock the Notifications