15ம் தேதிக்குள் பதவி வேணும்: பாஜகவுக்கு எதியூரப்பா கெடு

கர்நாடக முதல்வராக இருந்த எதியூரப்பா ஊழல் புகாரில் சிக்கி பாஜக மேலிடத்தின் கட்டாயத்தால் கடந்த ஆகஸ்ட் மாதம் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் வரும் 15ம் தேதிக்குள் தனக்கு உகந்த பதவியை தர வேண்டும் என்று கட்சிக்கு மேலிடத்திற்கு கெடுவிதித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கட்சி மேலிடம் எனக்கு உகந்த பதவியை அளிக்க வேண்டும். இது குறித்து மேலிடத்திடம் தெரிவித்துள்ளேன். வரும் 15ம் தேதி வரை பொறுத்திருந்து பார்ப்பேன். தேவைப்பட்டால் இந்த மாதம் 2வது வாரத்தில் டெல்லிக்கு செல்வேன் என்றார்.
கட்சி மேலிடம் பதவி எதுவும் வழங்கவில்லை என்றால் அவர் தனது வெறுப்பை காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பதவியை ராஜினாமா செய்த போதே தான் மீண்டும் முதல்வராகப் போவதாக அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கர்நாடக உள்துறை அமைச்சர் அசோகா தலைமையிலான பாஜக எம்.எல்.ஏ.க்கள் எதியூரப்பாவை சந்தித்து பேசினர். அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம் என்று அவர்கள் அவரைக் கேட்டுக் கொண்டனர்.
எதியூரப்பாவுக்கு கட்சி மேலிடம் பதவி கொடுக்கவில்லை என்றால் அவர் கட்சியில் இருந்தே விலகிவிடுவார் என்று கூறப்படுகின்றது. அதனால் அப்படி எல்லாம் கட்சியில் இருந்து விலகிவிட வேண்டாம் என்று தாங்கள் கேட்டுக் கொண்டதாக அசோகா தெரிவித்தார்.
இந்நிலையில் எதியூரப்பாவுக்கு மீண்டும் முதல்வர் பதவி அல்லது கர்நாடக மாநில பாஜக தலைவர் பதவியைக் கொடுக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே கடந்த வாரம் தலைவர் பதவி குறித்து எதியூரப்பாவுக்கும், மாநில பாஜக தலைவர் ஈஸ்வரப்பாவுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. அப்போது தன்னை கட்சியில் இருந்து தூக்க ஈஸ்வரப்பா முயற்சி செய்வதாகவும், தான் சிறைக்கு சென்றதற்கும் அவர் தான் காரணம் என்றும் எதியூரப்பா குற்றம் சாட்டினார். இந்நிலையில் ஊழல் வழக்குகளில் இருந்து வெளிவரும் வரை அவருக்கு எந்த பதவியும் கொடுப்பதாக இல்லை என்று ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications