நியூயார்க்: பாத்ரூமை பயன்படுத்த விடாததால் கோவில், இஸ்லாமிய மையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர்!
நியூயார்க்: நியூயார்க்கில் பாத்ரூமை பயன்படுத்த அனுமதி தராத இஸ்லாமிய மையம் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசிய நபர் கைது செய்யப்பட்டார்.
கடந்த 1ம் தேதி நியூயார்க் நகரில் ஒரு இந்துக் கோவில், இஸ்லாமிய மையம் உள்ளிட்ட 5 இடங்களில் மதுபானம், பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களில் திரியைப் பொறுத்தி தீ பற்ற வைத்து வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
இது மதரீதியிலான தாக்குதலாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. இகு குறித்து விசாரணை நடத்திய போலீசார் கயானாவைச் சேர்ந்த அமெரிக்க குடியுரிமை பெற்ற 40 வயதான ரே லெஜண்ட் என்ற நபரைக் கைது செய்தனர்.
டிரக் டிரைவரான இவர் இப்போது வேலையேதும் இல்லாமல் உள்ளார். கடந்த மாத இறுதியில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்து பால் பாக்கெட்டைத் திருடிய இவரை அந்தக் கடைக்காரர்கள் அடித்து வெளியே விரட்டியுள்ளனர்.
இந் நிலையில் இஸ்லாமிய மையத்துக்குள் நுழைந்து அங்குள்ள பாத்ரூமை பயன்படுத்த முயன்ற இவரை, அந்த அமைப்பினரும் வெளியே விரட்டினர்.
இதனால் கடுப்பான ரே, அந்த இஸ்லாமிய மையம் மீதும் அருகே இருந்த கோவில் மீதும் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது.