எப்ஐஆரில் பெயர் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிடலாமா?: அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
டெல்லி: குற்றப்பத்திரிக்கையில் பெயர் இடம்பெற்றுள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது குறித்து எட்டு வாரத்திற்கு பதிலளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற பெஞ்ச் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநலமனுவை விசாரித்த நீதிமன்றம் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது
தேர்தல் நடைமுறை விதிகளின்படி, தண்டனை பெற்ற குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால், மிகக் கடுமையான குற்றவியல் வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் பெயர் இருந்தாலே தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்' என சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த மனு மீதான விசாரணை, நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான பெஞ்சு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் மோகன், நாடாளுமன்றத்தில் உள்ள 76 எம்.பி.க்களுக்கு எதிராக 275 மிகக் கடுமையான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, அரசியலில் கிரிமினல்களின் ஆதிக்கத்தை தடுப்பதற்கு தகுந்த சட்டத்தை இயற்றுமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என வாதிட்டார்.
8 வாரத்திற்குள் பதில்
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக எட்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும் தலைமை தேர்தல் கமிஷனுக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்ற பெஞ்சு உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications