வேலியே பயிரை மேய்ந்தது-விபச்சார விடுதி நடத்திய போலீஸ்காரர் சஸ்பெண்ட்!
சென்னை: சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை வாடகைக்கு எடுத்து விபச்சார விடுதி நடத்தியதாக போலீஸ் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தண்டனைக்குள்ளான போலீஸ் கடந்த சில வருடங்களுக்கு முன் விபச்சார தடுப்பு பிரிவில் பணியாற்றியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை தியாகராயநகர் சித்தி விநாயகர் கோவில் தெருவில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் விபசாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விபசார தடுப்பு பிரிவு போலீசார் அந்த பங்களாவில் சோதனை நடத்தி பெண்களை வைத்து விபசாரம் நடத்தியதாக சுபா என்கிற நான்சியை கைது செய்தனர்.
போலீசுக்கு தொடர்பு
கைதான பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அந்த வீட்டை மாதவரத்தைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் என்பவர் லீசுக்கு எடுத்து இருந்ததும் அவர் அயனாவரத்தில் போலீஸ்காரராக வேலை பார்ப்பதும் தெரிய வந்தது.
அரிகிருஷ்ணன் மீது துறை ரீதியான விசாரணை நடந்தது. இதில் அவருக்கும், கைதான சுபாவுக்கும் தொடர்பு இருந்ததும் லீசுக்கு எடுத்த வீட்டை அவரிடம் ஒப்படைத்து விபசார தொழில் நடத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
பணி இடை நீக்கம்
இதையடுத்து போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவின் பேரில் கிழக்கு மண்டல இணை கமிஷனர் சேஷசாயி, விபச்சாரவிடுதி நடத்திய அரிகிருஷ்ணனை பணி இடைநீக்கம் செய்தார். தண்டணைக்குள்ளான அரிகிருஷ்ணன் 2008-ம் ஆண்டு விபசார தடுப்பு பிரிவு போலீஸ்காரராக இருந்ததாகவும் அப்போது சுபாவுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications