நிலஅபகரிப்பு புகார்: முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உதவியாளர் கைது
சென்னை: நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உதவியாளர் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் அரசியல் உதவியாளர் கெளசிகபூபதி. இவர் மீது சென்னை கொளத்தூரைச் சேர்ந்த முத்து என்பவர் ரூ.10 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்ததாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் இன்று கெளசிகபூபதி சென்னையில் கைது செய்யப்பட்டார்.
முத்து அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது,
செங்குன்றத்தை அடுத்த பம்மதுகுளம் கிராமத்தில் 40.38 ஏக்கர் நிலத்தை நானும், கெளசிகபூபதி, ரவி உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து விலைக்கு வாங்கினோம். இதில் பொது அதிகாரம் பெற்ற கெளசிகபூபதி மொத்த நிலத்தையும் தனது குடும்பத்தினருக்கும், மற்றவருக்கும் விற்பனை செய்தார்.
அதில் கிடைத்த பணத்தில் எனது பங்கை தராமல் மோசடி செய்துவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுத்து சொத்தை மீட்டு தர வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவித்திருந்தார். இது குறித்து விசாரிக்க கமிஷனர் திரிபாதி, கூடுதல் கமிஷனர் அபய் குமார்சிங் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ராதிகா மேற்பார்வையில் உதவி கமிஷனர் ரவிசங்கர், இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் நடத்திய விசாரணைக்கு பிறகு, இன்று காலை சென்னை எழும்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த கெளசிகபூபதி கைது செய்யப்பட்டார். அதன்பிறகு பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இது குறித்து கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் கூறியதாவது,
நில அபகரிப்பு வழக்குகளில் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். புகார் மீது விசாரணை நடத்தி உண்மை இருந்தால் ஆதாரங்கள் அடிப்படையில் கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது, என்றார்.












Click it and Unblock the Notifications