‘தானே’ புயல் சேதம் ஆய்வு: மத்திய குழுவினர் சென்னை வருகை – தலைமைச்செயலருடன் ஆலோசனை
சென்னை: தானே' புயலால் தமிழகத்தில் ஏற்பட்ட சேதம் பற்றி ஆய்வு செய்ய மத்திய குழுவினர் இன்று சென்னைக்கு வந்துள்ளனர். புயல் சேதம் குறித்து தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
தானே' புயல் ஏற்படுத்திய பாதிப்பினால் கடலூர், புதுச்சேரி நகரங்களும், கடலோர கிராமங்களும் முற்றிலும் சிதைந்து போயுள்ளன. உயிர்சேதம் குறைவாக இருந்தாலும் உடமைகளும், விவசாயநிலங்களும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சேதமதிப்பு இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இந்த நிலையில் இந்த நிலையில் தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிடுவதற்காக மத்திய உள்துறை இணைச் செயலாளர் லோகேஷ் ஜா தலைமையில் மத்திய அரசு குழு ஒன்றை அமைத்து உள்ளது.
இந்த குழுவில் வேளாண்மை, குடிநீர், நிதி, சுகாதாரம், மின்சாரம், ஊரக மேம்பாடு, நீர்வளம், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை ஆகிய அமைச்சகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இடம்பெற்று உள்ளனர். மேலும் தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் திட்டக்குழுவைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இடம்பெற்று இருக்கிறார்கள். 11 பேர் கொண்ட இந்த குழுவினர், இன்று சென்னை வந்துள்ளனர்.
சென்னை கோட்டையில் தமிழக அரசு அதிகாரிகளுடன் புயல் சேதம் குறித்து அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
அப்போது தானே' புயலால் ஏற்பட்ட பாதிப்புகள், சேதங்கள் பற்றிய விவரங்களை தெரிவித்தனர். மேலும் புயல் சேதம் பற்றிய அறிக்கையினையும், மத்திய குழுவினருடம் அதிகாரிகள் வழங்கினர்.
புயல் நிவாரணம்
மத்திய குழுவினர் ஞாயிறுக்கிழமையன்று கடலூர் மாவட்டத்திலும் மற்றும் புதுச்சேரியிலும் சுற்றுப்பயணம் செய்து புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர். இதனையடுத்து அவர்கள் டெல்லி சென்று மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்வார்கள். இந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யும்.












Click it and Unblock the Notifications