மதுரையில் ரோந்து சென்ற இன்ஸ்பெக்டர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
மதுரை: மதுரை செல்லூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் இன்று அதிகாலை ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை செல்லூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக தற்காலிகப் பொறுப்பு வகித்தவர் கோபாலகிருஷ்ணன் (52). அவரும், இன்னொரு காவலரும் இன்று அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் விளாங்குடி ரயில்வே கேட் பகுதியை அடைந்தும் கோபாலகிருஷ்ணன் தன்னுடன் வந்த காவலரை கொஞ்ச நேரம் காத்திருக்குமாறு கூறிவிட்டு சென்றார்.
ரயில்வே கேட் நோக்கி சென்ற இன்ஸ்பெக்டர் நெடுநேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அந்த காவலர் ரயில்வே கேட் அருகே சென்று பார்த்தார். அப்போது ரயில் பாதையில் கோபாலகிருஷ்ணனின் உடல் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர் எதற்காக திடீர் என்று தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசாருக்கு தெரியவில்லை.












Click it and Unblock the Notifications