விஜயகாந்த் வாயை மட்டுமல்ல, அனைத்தையும் மூடிக் கொண்டுள்ளார்-நேரு விளாசல்
திருச்சி: தே.மு.தி.கவின் மேட்டூர் எம்.எல்.ஏ. மேல் வழக்கு போட்டு, அக்கட்சியையே அடக்கி விட்டனர். அவர்களும் அடங்கி விட்டனர். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வாயை மட்டுமல்ல, அனைத்தையும் மூடிக் கொண்டுள்ளார் என்று பேசியுள்ளார் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு.
திருச்சியில் நடந்த கூட்டத்தில்தான் நேரு இப்படிப் பேசினார். அத்தோடு நிற்கவில்லை நேரு, மேற்கு வங்கத்தில் காங்கிரஸை எட்டி உதைத்த மம்தாவைப் போல தமிழகத்திலும் திமுக, காங்கிரஸை எட்டி உதைக்க வேண்டும், மேற்கு வங்கத்தில் தேர்தல் வந்ததைப் போல தமிழகத்திலும் வரும் என்றும் அவர் பேசியுள்ளார்.
திருச்சி மாநகர திமுக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு நேரு பேசினார். தனது பேச்சில் காங்கிரஸை மறைமுகமாகவும், விஜயகாந்த்தை படு பச்சையாகவும் விமர்சித்தார். அவரது பேச்சிலிருந்து சில...
தமிழ்ப் புத்தாண்டு
தி.மு.க.வினர், தைத் திங்கள் முதல்நாளை தமிழ் புத்தாண்டாக சிறப்பாக கொண்டாட வேண்டும். தங்களின் வீடுகளில் கோலமிடும் போது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று எழுதியும், முடிந்தால் புத்தாடை அணிந்தும், வீடுகளில் கட்சிக் கொடியேற்றியும் தமிழ்ப்புத்தாண்டை கொண்டாட வேண்டும் என்றார் நேரு.
காங்கிரஸ்
மேற்கு வங்கத்தில் காங்கிரசை கூட்டணியிலிருந்து வெளியேறச் சொல்லி மம்தா அறிவித்தார். இதையடுத்து, காங்கிரஸ் சிறிது இறங்கி வந்தபோதும், மம்தா அதெல்லாம் முடியாது என்று கூறி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுக்கு எதிராக களம்காண தயாராகி விட்டார். அதுபோல், இங்கும் வெகுவிரைவில் நடக்கும். அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்று ஒரே நேரத்தில் ஜெயலலிதா அரசு கவிழும் என்றும், காங்கிரஸை திமுக உதறும் என்றும் அவர் சூசகமாக பேசினார்.
அடுத்து விஜயகாந்த்
நம்முடைய போதாத காலம் அ.தி.மு.க.,வுடன் விஜயகாந்த் கூட்டு சேர்ந்தார். அவருடைய தயவில் ஜெயித்த அ.தி.மு.க. அக்கட்சியை எட்டி உதைத்து விட்டது. தே.மு.தி.கவின் மேட்டூர் எம்.எல்.ஏ., மேல் வழக்கு போட்டு, அக்கட்சியையே அடக்கி விட்டனர். அவர்களும் அடங்கி விட்டனர். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வாயை மட்டுமல்ல, அனைத்தையும் மூடிக் கொண்டுள்ளார் என்று நேரு பேசியபோது குறிப்பாக கடைசி வார்த்தையை அவர் சொன்னபோது கூட்டத்தில் அமோக கைத்தட்டல்.
தோற்றது ஏன்?
திருச்சியில் திமுக தோற்றதற்கு என்ன காரணம் என்பது குறித்து அவர் கூறுகையில், கடந்த எம்.பி. தேர்தலில் ஸ்ரீரங்கம் சட்டசபையில் மட்டும் தோற்று, திருச்சி எம்.பி. தொகுதியை இழந்தோம். அதுமட்டும் நடக்காமல் போயிருந்தால், ஜெயலலிதா இங்கு வந்திருக்கமாட்டார். அ.தி.மு.கவும் ஆட்சிக்கு வந்திருக்காது.
தமிழகத்தில் புதிதாக ஓட்டுரிமை பெற்ற, 30 லட்சம் இளம் வாக்காளர்களிடம் நம்மைப் பற்றி அவதூறு பரப்பப்பட்டது. அதற்கு உரிய பதில் கூற நாம் தவறிவிட்டோம். ஆகையால், மாற்றத்தை எதிர்பார்த்த, அந்த இளம் வாக்காளர்கள் மாற்றி ஓட்டு போட்டு விட்டனர் என்று காரணம் கூறினார் நேரு.












Click it and Unblock the Notifications