திருவண்ணாமலை திமுக இளைஞர் அணி நிர்வாகிகளை இன்டர்வியூ செய்து நியமித்த ஸ்டாலின்
வழக்கமாக திமுகவில் உள்ள அனைத்துப் பொறுப்புகளுக்கும் தேர்தல் நடத்தித்தான் பொறுப்பாளர்களை நியமிப்பார்கள். ஆனால் இளைஞர் அணி பொறுப்பாளர்களை ஸ்டாலினை நேர்முகம் மூலம் தேர்வு செய்ய ஆரம்பித்துள்ளார்.
புதிய நிர்வாகிகளுக்கு வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நகர, ஒன்றிய நிர்வாகிகளுக்கு 35 வயதும், மாவட்ட நிர்வாகிகளுக்கு 40 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநில அளவிலான நிர்வாகிகளுக்கான வயது இதுவரை தெரிவிக்கப்படவில்லை. காரணம், ஸ்டாலினுக்கே 54 வயதாகி விட்டது என்பதால் எந்த வயதை நிர்ணயிப்பது என்பதில் சற்றுக் குழப்பம் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அதை மட்டும் இதுவரை அறிவிக்கவில்லை.
திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி பொறுபாளர்களுக்கான தேர்காணல் நேற்று நடந்தது.
இளைஞர் அணி பொறுப்புக்கு விண்ணப்பம் செய்திருந்தவர்கள் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நகரம், ஒன்றியம் வாரியாக அமரவைக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் தனித்தனியாக மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். இதற்காக ஒவ்வொருவராக அழைக்கப்பட்டனர். அவர்களிடம் பிறந்த தேதி, கட்சியில் உள்ள பொறுப்பு, தந்தை கட்சி பொறுப்பில் இருக்கிறாரா, இளைஞர் அணியில் சேர்ந்து என்ன செய்ய நினனைக்கிறீர்கள் என்பது உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் எ.வ.வேலு எம்.எல்.ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.