முல்லைப் பெரியாறு : அணையை உடைக்க உரிமை உண்டு- கேரளா புதிய மனு
டெல்லி: கேரள பகுதிக்குள் இருக்கும் முல்லைப் பெரியாறு அணையை உடைக்கவும், புதிய அணை கட்டவும் கேரளாவுக்கு உரிமை உண்டு என்று ஐவர் கமிட்டியிடம் கேரள அரசு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. புதிய அணை கட்டிய பின், அதை பாதுகாக்கும் உரிமை கேரளாவுக்கு மட்டுமே அளிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் விவசாயம், குடிநீர் தேவையை நிறைவேற்றுவது முல்லைப் பெரியாறு அணைதான். இந்த அணை கட்டி 100 ஆண்டுகள் ஆகிவிட்டது என்ற காரணத்தை காட்டி, அதனை இடிக்க கேரளா முயற்சி மேற்கொண்டுள்ளது. தற்போது இருக்கும் அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என்று, உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஐவர் குழுவிடம் கேரளா வற்புறுத்தி வருகிறது.
இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ’’தற்போது இருக்கும் அணை மிகவும் பலமாக இருக்கிறது. இதனால் அணை உடைய வாய்ப்பு இல்லை. எனவே புதிய அணை தேவை இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அணையை இடிக்க உரிமை உண்டு
இந்த நிலையில் வியாழக்கிழமையன்று டெல்லியில் ஐவர் குழுவின் கூட்டம் நீதிபதி ஆனந்த் தலைமையில் நடந்தது. அப்போது கேரளா சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, கேரள பகுதிக்குள்தான் முல்லைப் பெரியாறு அணை இருக்கிறது. எனவே அதை உடைத்து விட்டு புதிய அணை கட்ட கேரளாவுக்கு உரிமை உண்டு.
புதிய அணை கட்டிய பின், அதை பாதுகாக்கும் உரிமை கேரளாவுக்கு அளிக்க வேண்டும். அதன் நீர்பங்கீடு பற்றி ஆராய்ந்து முடிவு எடுக்க, உச்சநீதிமன்றம் ஒரு குழுவை நியமிக்கலாம். இந்த குழு இதற்கான விதிமுறைகளை வகுக்கலாம்.
புதிய அணையின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழ்நாட்டுக்கு பங்கீடு செய்யவும் கேரளா தயாராக இருக்கிறது’’ என்று புதிய மனுவில் கேரளா கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications