உள்ளாடைக்குள் வைத்து புழல் சிறைக்குள் கஞ்சா கடத்த முயன்ற வார்டன் கைது
சென்னை: புழல் சிறைக்குள் கஞ்சா கடத்த முயன்ற சிறை வார்டன் ஜோதிமணி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
புழல் சிறையில் வார்டனாக இருப்பவர் ஜோதிமணி(23). மதுரையைச் சேர்ந்த அவர், சிறை குடியிருப்பில் வசித்து வந்தார். நேற்று மாலையில் அவர் பணிக்கு சென்றார். அப்போது சிறை நுழைவாயிலில் நின்ற காவலர்களுக்கு அவரது நடையில் சந்தேகம் ஏற்பட்டது.
இதனையடுத்து அவரிடம் சோதனை நடத்தினர். அப்போது அவரது உள்ளாடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா கவர் சிக்கியது. இது குறித்து சிறை சூப்பிரண்டு கருப்பண்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் புழல் போலீசாரிடம், ஜெயிலர் செந்தில்குமார் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் வார்டன் ஜோதிமணியை இன்ஸ்பெக்டர் ஹரி கைது செய்து அவரிடம் இருந்த 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தார்.
விசாரணையில், சிறையில் உள்ள குறிப்பிட்ட செடியின் கீழ் கஞ்சா கவரை வைக்குமாறு காவாங்கரையைச் சேர்ந்த நபர் கொடுத்தாகவும், அதற்காக ரூ.2,000 அளிப்பதாகக்கூறியதாகவும் ஜோதிமணி தெரிவித்தார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த புழல் போலீசார் சிறையில் உள்ள எந்த கைதிக்காக கஞ்சா கடத்தப்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.