ஏழைகளுக்கு பொங்கல் வைக்க அரிசி, வெல்லம், முந்திரி மற்றும் கரும்பு-வழங்கினார் விஜயகாந்த்
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் ஏழைகளுக்கு பொங்கல் வைக்கத் தேவையான பொருட்களையும், கரும்பையும் வழங்கி பொங்கல் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், போதிய வருமானம் இல்லாமை உள்ளிட்ட பிரச்சனைகளில் சிக்கி தவிக்கும் ஏழை மக்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்க உள்ளதாக கடந்த 2 நாட்களுக்கு முன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்து இருந்தார்.
அதன்படி பொங்கல் வைக்கத் தேவையான பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜயகாந்த், எம்.ஜி.ஆர். ஸ்டைலில் கூலிங் கிளாஸ் அணிந்து வந்திருந்தார்.
ஏழை, எளியவர்களுக்கு புத்தரிசி, வெல்லம், முந்திரி பருப்பு, ஏலக்காய், கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொங்கல் பொருட்களை வழங்கி அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.