மத்திய பிரதேச மசூதி விழாவில் கூட்ட நெரிசல்: 4 பெண்கள் உள்பட 12 பேர் பலி
ரத்லாம்: மத்திய பிரதேச மாநிலத்தின் ரத்லாம் மாவட்டத்தில் மசூதி விழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலியாகியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் ரத்லாம் மாவடத்தில் உள்ளது ஹுசைன் தெக்ரி என்னும் மசூதி. அங்குள்ள முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் முஹர்ரம் மாதம் பிறந்து 40 நாட்கள் கழித்து செஹல்லம் என்னும் பிரார்த்தனை செய்வார்கள். அந்த பிரார்த்தனை இன்று காலை துவங்கியது.
இதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் மசூதிக்கு வந்தனர். அங்குள்ள நுழைவாயிலில் அனைவரும் முந்தியடித்து நுழைய முயற்சி செய்துள்ளனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வரிசையை ஒழுங்குபடுத்துவதாக நினைத்து மக்களை பிடித்து தள்ளியுள்ளனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உள்பட 12 பேர் பரிதாபமாக பலியாகினர். பலர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சௌஹான் அறிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் கூட்ட நெரிசலில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10,000ம், காயமடைந்தவர்களுக்கு ரூ.5,000ம் வழங்கப்படும் என்று ரத்லாம் மாவடட் கலெக்டர் ராஜேந்திர குமார் ஷர்மா அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications