பாபா ராம்தேவ் முகத்தில் கறுப்பு மை வீச்சு!

யோகா குரு பாபா ராம்தேவ் ஊழல் மற்றும் கருப்புப் பணத்திற்கு எதிராக இன்று டெல்லியில் உள்ள கான்ஸ்டிட்யூஷனல் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
ஊழலுக்கு எதிராக வரும் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பிரசாரம் மேற்கொள்வது தொடர்பாக அவர் தன் திட்டங்களை விளக்கியபோது, அவர் மீது கறுப்பு மை வீசப்பட்டது. உடனே கூட்டத்தில் இருந்த ஒருவர் ராம்தேவின் முகத்தில் கருப்பு மையை தெளித்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ராம்தேவின் ஆதரவாளர்கள் அந்த நபரைப் பிடித்து பலமாக அடித்தனர். இதில் அவரது வாயில் இருந்து ரத்தம் சொட்டியது. அந்த நபர் பெயர் சித்திக் என்பது பின்னர் தெரியவந்தது.
ஒரு பாதுகாப்பு அலுவலர் போல் வாக்கி டாக்கி வைத்துக் கொண்டு அந்த கருத்தரங்க அறைக்குள் சித்திக் நுழைந்துள்ளார். அவரிடம் இருந்து திராவக புட்டி ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர்.
இது குறித்து ராம்தேவ் கூறுகையில், "நான் என்ன செய்தேன்? எதற்காக இப்படி செய்கிறார்கள்? எப்பொழுதுமே உண்மைக்காக போராடுபவர்கள் அதற்கான விலையைக் கொடுத்துத் தான் தீர வேண்டும்.
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வரச் சொல்லி போராடினால் முகத்தில் கருப்பு மை பூசுகிறார்கல். இதனால் எல்லாம் நான் அசரமாட்டேன். என்ன நடந்தாலும் சரி தொடர்ந்து போராடுவேன்," என்றார்.












Click it and Unblock the Notifications