நீ இறந்துட்டம்மா, அதான் பென்ஷன் தரல: மூதாட்டியை அதிரவைத்த அரசு அதிகாரிகள்
பெங்களூர்: 4 மாதமாக முதியோர் பென்ஷன் வராத காரணத்தை அறிந்துகொள்ள தாலுகா அலுவலகம் சென்ற மூதாட்டியிடம் அவர் இறந்துவிட்டதால் பென்ஷன் நிறுத்தப்பட்டது என்று கூறி அரசு அதிகாரிகள் அவரை அதிர வைத்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பேலூர் தாலுகா, தாலகோடு கிராமத்தைச் சேர்ந்தவர் சோமம்மா(70). அவரது கணவர் ருத்ரைய்யா. தற்போது அவர் உயிருடன் இல்லை. கடந்த 2007ம் ஆண்டில் இருந்து சோமம்மாவுக்கு முதியோர் பென்ஷனாக ரூ.400 கிடைத்து வருகிறது. இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக அவருக்கு பென்ஷன் பணம் வரவில்லை. இதயைடுத்து அவர் பேலூர் தாலுகா அலுவலகம் சென்று தனக்கு கடந்த 4 மாதங்களாக பென்ஷனே வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அதற்கு அங்கிருந்த அதிகாரிகள் அவர்களது ஆவணங்களின்படி சோமம்மா 27-9-2011 அன்று இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ந்த அந்த மூதாட்டி 'நான் தான் உயிரோடு இருக்கிறேனே. அதனால் மீண்டும் பென்ஷன் கொடுங்கள். அத்துடன் கடந்த 4 மாதத்திற்குரிய பணத்தையும் தந்தால் மிகவும் உதவியாக இருக்கும்' என்றார்.
இதற்கிடையே இந்த விவகாரம் பத்திரிக்கைக்காரர்களுக்கு தெரிய வந்தது. அவர்கள் இது குறித்து அதிகாரி ஷிவாய்யாவிடம் தெரிவித்தனர். அதற்கு அவர் கூறியதாவது, முதியோர் பென்ஷன் வாங்குபவர்களின் பெயர்களை அங்கன்வாடி ஊழியர்கள் சரிபார்த்தனர். அப்போது தான் தவறு நடந்திருக்க வேண்டும். இந்த தவறை திருத்தி பாக்கியுள்ள பணமும் சோமம்மாவுக்கு வழங்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications