நிலமோசடி வழக்கை சட்டப்படி எதிர் கொள்வேன், தற்போது ராஜினாமா செய்யும் எண்ணம் இல்லை- அச்சுதானந்தன்
திருவனந்தபுரம்: உறவினருக்கு விதிமுறைகளுக்கு மீறிய வகையில் நிலம் பதிவு செய்து கொடுத்த வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் கேரள முதல்வரும், தற்போதைய எதிர்கட்சி தலைவருமான அச்சுதானந்தன், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் போது, ராஜினாமா செய்வது குறித்து ஆலோசிப்பதாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் கேரள முதல்வரும், தற்போதைய எதிர்கட்சி தலைவராகவும் இருப்பவர் அச்சுதானந்தன்(87). இவர் கேரள முதல்வராக இருந்த போது, அவரது உறவினர் டி.கே.சோமன் என்பவரின் பேரில் நிலம் ஒன்றை பதிவு செய்து கொடுத்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு கேரளாவில் இடதுசாரிகளின் ஆட்சி கவிழ்ந்து, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது.
இந்த நிலையில் தற்போது சோமனுக்கு வாங்கி கொடுத்த நிலத்தை பதிவு செய்ததில் மோசடி நடந்திருப்பதாக புலனாய்வு மற்றும் ஊழல் எதிர்ப்பு துறையினர், அச்சுதானந்தன் மீது கோழிக்கோடு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
இவ்வழக்கில் மார்க்சிஸ்ட் கட்சியில் மூத்த தலைவரான அச்சுதானந்தன், தனது எதிர்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உட்பட இதர கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அச்சுதானந்தன் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர்களிடம் தனது எதிர்கட்சி தலைவர் பதிவியை ராஜினாமா செய்வதாக தகவல் தெரிவித்தார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமை, அவரை ராஜினாமா செய்ய தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.
மேலும் அச்சுதானந்தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள நிலமோசடி வழக்கு, காங்கிரஸ் கட்சியினரின் அரசியல் காழ்ப்புணர்ச்சியை தான் காட்டுகின்றது. ஊழலுக்கு எதிரான நிற்கும் அச்சுதானந்தனின் செயல்பாடுகள் கடந்த சட்டசபை தேர்தலின் போது தெளிவாக தெரிந்தது, என்று சிபிஎம் தலைவர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அச்சுதானந்தன் கூறியதாவது,
காங்கிரஸ் கட்சியினர் என் மீது தொடுத்துள்ள நிலமோசடி வழக்கை சட்டப்படியும், அரசியல் முறையிலும் எதிர்கொள்வேன். கட்சியின் தலைமையின் அறிவுறுத்தலின்படி, தற்போது எதிர்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் எண்ணம் இல்லை. நிலமோசடி வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த பிறகு ராஜினாமா செய்வதை குறித்து ஆலோசிக்கப்படும், என்றார்.












Click it and Unblock the Notifications