'மின் ஆளுமைக்கான முதல்வரின் உயரிய விருது' – ஜெ. அறிவிப்பு

முதலமைச்சர் விருது
தமிழக அரசின் பல்வேறு சேவைகளும் கணினி மயமாக்கப்பட்டு, பொதுமக்கள் அரசு சேவைகளை எளிதில் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. மின் ஆளுமையினை பயன்படுத்தி, அரசின் சேவைகளை மக்களின் இருப்பிடத்திற்கே கொண்டு செல்லும் அரசுத்துறைகளை ஊக்குவிக்கும் வகையிலும், உரிய அங்கீகாரம் அளிக்கும் வகையிலும், 'மின் ஆளுமைக்கான முதலமைச்சரின் உயரிய விருது' என்ற விருதினை ஆண்டுதோறும் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
மாநிலத்தில் மின் ஆளுமை தொடர்பான சிறந்த செயல்பாடுகளை அங்கீகரித்தல், மின் ஆளுமை குறித்த சிறந்த செயல்முறைகளை வடிவமைத்து செயல்படுத்துதல் தொடர்பான அறிவினை பரப்புதல், அரசின் செயல்பாடுகளை மின்ஆளுமை முறைக்கு மாற்றுவதை ஊக்குவித்தல், மின் ஆளுமை முறையை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் பிரச்சனைகளை கண்டறிந்து அவற்றினை தீர்த்தல், இடர்பாடுகளை தவிர்த்தல், வெற்றிக்கு வித்திடல் ஆகியவற்றை ஊக்குவித்து, அந்த அனுபவங்களை பகிர்ந்துக் கொள்ளுதல் போன்றவை இந்த விருதின் நோக்கமாகும்.
புதுமையான முயற்சி
அரசின் செயல்பாடுகளை பகுப்பாய்வு செய்து, பணி முறைகளை மறுவடிவமைத்து, செயல்பாடுகளை மேம்படுத்துதலில் சிறந்த செயல்முறை, தரமான சேவை அல்லது இவை அனைத்தையும் உள்ளடக்கிய சிறந்த திட்டங்களை அங்கீகரிக்கும் விதமாக 'அரசின் செயல்பாடுகளை மறுவடிவமைத்தலில் சிறந்து விளங்குதல்' என்ற பிரிவின் கீழ் ஒரு விருதும், தற்பொழுதுள்ள தகவல் தொலை தொடர்பு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அல்லது புதுமையான முயற்சிகள் மேற்கொண்டு பயனாளிகளுக்கு மேம்படுத்திய சேவைகளை வழங்கும் திட்டங்களை அங்கீகரிக்கும் விதமாக 'புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குடிமக்களை மையமாக கொண்டு வழங்கப்படும் சேவைகளில் சிறந்து விளங்குதல்' என்ற பிரிவின் கீழ் ஒரு விருதும் வழங்கப்படும்.
ரூ. 30000 பரிசுக்கோப்பை
பிற மாவட்டங்களில் பயன்படுத்ததக்கதாக உள்ள மாவட்ட அளவிலான சிறந்த மின்ஆளுமை முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக 'மாவட்ட அளவிலான மின்ஆளுமை முயற்சிகள்' என்ற பிரிவின் கீழ் ஒரு விருதும், ஆக மூன்று பிரிவுகளின் கீழ் 'மின் ஆளுமைக்கான முதல்- அமைச்சரின் உயரிய விருது' வழங்கப்படும். இந்த விருதின் கீழ் 30,000 ரூபாய் மதிப்புள்ள கோப்பை பரிசாக வழங்கப்படும்.
வல்லுநர்கள் தேர்ந்தெடுப்பர்
மின் ஆளுமைக்கான சிறந்த விருதினை பெறும் துறைகளை தேர்வு செய்வதற்காக ஒரு கூர்ந்தாய்வு குழுவும், ஒரு தேர்வுக்குழுவும் அமைக்கப்படும். கூர்ந்தாய்வுக் குழுவின் தலைவராக மின் ஆளுமை முகமையின் தலைமைச்செயல் அலுவலரும் உறுப்பினர்களாக, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மின் ஆளுமைப்பிரிவு, தமிழக அரசின் தகவல் தொழில் நுட்பவியல் துறை, நாஸ்காம் ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த வல்லுநர்களும் செயல்படுவார்கள்.
துறைகளிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள், கூர்ந்தாய்வுக் குழுவினால் மதிப்பீடு செய்யப்பட்டு, தகுதியான கருத்துருக்கள் தேர்வுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். தேர்வுக்குழு, இந்த கருத்துருக்களை ஆய்வு செய்து, ஒவ்வொரு பிரிவிலும் வெற்றியாளர்களை தேர்வு செய்யும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications