புயலில் கரும்பு விளைச்சல் பாதிப்பு - சந்தையில் கடும் விலை உயர்வு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுத்தோறும் கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை களை கட்டுவது வழக்கம். இந்த நிலையில் தமிழகத்தை தாக்கிய தானே புயலால், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கரும்பு பயிர்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டு சேதமடைந்தன.
பெரும்பாலான கரும்புச் செடிகள் புயலில் சாய்ந்துவி்ட்டதால் குறைந்தளவே வெட்டி எடுக்கப்படுகின்றது. இதனால் தேவைக்கு ஏற்ப கரும்பு கட்டுகள் சந்தைக்கு வருவதில்லை. பொங்கல் பண்டிக்கைக்கு கரும்பு மிக முக்கியம் என்பதால், சிதம்பரத்தில் பன்னீர் கரும்பு ஒன்றுக்கு ரூ.40 என்று விற்கப்படுகின்றது. மேலும் சிதம்பரத்தில் சில இடங்களில் கரும்புகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கடலூரில் மஞ்சள் பயிர்கள் புயலில் சேதமடைந்ததால், நாகையில் இருந்து மஞ்சள் கொத்துகளை கொண்டு வரப்பட்டு, சிதம்பரத்தில் விற்கப்படுகின்றது. இதனால் மஞ்சள் கொத்துகள் ஒன்றுக்கு ரூ.15 என்று விற்கப்படுகின்றது.
திருப்பூரில் ரூ.30:
திருப்பூரில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கரும்பு விளைச்சல் குறைந்த அளவில் நடைபெற்றது. மேலும் அறுவடைக்கு ஆள்பற்றாக்குறை, போக்குவரத்து கட்டணம் உள்ளிட்ட பிரச்சனைகளால் திருப்பூரில் ஒரு கரும்புக்கு ரூ.30 என்ற விலையில் விற்கப்படுகின்றது.
மேலும் போகிப் பண்டிகையை யொட்டி, தொழுவு, ஊதியூர், கருமாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சொற்ப அளவிலேயே பூளைப்பூ, ஆவாரம்பூ கொண்டு வரப்பட்டிருந்தது; கடும் தட்டுப்பாட்டை அடுத்து பூளைப்பூ, ஆவாரம்பூ உள்ளிட்டவை ஒரு கட்டு ரூ.15 என்று விற்பனையானது.












Click it and Unblock the Notifications