ஈராக்கில் வெடிகுண்டு வெடித்து 30 பேர் பலி, 90 பேர் காயம்
பஸ்ரா: ஈராக்கில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 30 ஷியாத் முஸ்லீம்கள் பலியாகினர். 90க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ஈராக்கில் சர்வாதிகாரி சதாம் உசேன் ஆட்சியில், அந்நாட்டில் இருந்து சுன்னி முஸ்லீம்களுக்கு அரசியல் வட்டாரத்தில் அதிக அதிகாரம் இருந்தது. ஆனால் சதாம் உசேன், அமெரிக்க படையினரால் கொல்லப்பட்ட பிறகு, ஷியாத் முஸ்லீம்கள் அதிகளவில் அரசியல் அதிகாரத்திற்கு வந்தனர்.
இதனால் 2 முஸ்லீம் பிரிவினருக்கும் இடையே அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகின்றது. ஆட்சியில் பலவீனமாக இருந்த ஈராக் அரசிற்கு, அமெரிக்கப் படைகள் பாதுகாப்பு அளித்த வரை நாட்டில் குண்டு வெடிப்புகள், தாக்குதல்கள் அதிக அளவில் நடைபெறவில்லை.
கடந்த டிசம்பர் மாதத்தோடு, ஈராக்கில் இருந்த அமெரிக்க படைகள் முழுவதுமாக, சொந்த நாட்டிற்கு அழைத்து கொள்ளப்பட்டதால், தற்போது ஈராக்கில் 2 முஸ்லீம் பிரிவினர் இடையே தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில் ஈராக்கின் பஸ்ரா நகரின் தென்மேற்கு பகுதியில் உள்ள சுபயர் நகரில் இன்று ஒரு இரங்கல் கூட்டம் ஒன்று நடந்தது. இதில் அதிகளவில் ஷயாத் முஸ்லீம்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்குள் நுழைந்த ஒரு நபர் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தார். இதில் 30க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 90க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசாரும், மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து பஸ்ரா மாநகர செய்தித் தொடர்பாளர் அயத் அல் இமாரா கூறியதாவது,
வெடிகுண்டு சம்பவம் குறித்த தெளிவான காரணம் தெரியவில்லை. தற்கொலை படையை சேர்ந்த நபரால் வெடிகுண்டு வெடித்ததா அல்லது குறிப்பிட்ட இடத்தில் இருந்த வெடிகுண்டு வெடித்தா என்பது குறித்து விசாரணை நடத்து வருகின்றது. இந்த சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது, என்றார்.












Click it and Unblock the Notifications