மூழ்கும் இத்தாலிய கப்பலில் இருந்து 201 இந்தியர்கள் மீட்பு-5 பேர் பலி

இத்தாலியைச் சேர்ந்த சொகுசு கப்பல் காஸ்டா கன்கார்டியா கிக்லியோ தீவில் கடந்த 13ம் தேதி இரவு பாறையில் மோதி, தரை தட்டியது. அதன் பிறகு கடலில் மூழ்கத் துவங்கியுள்ளது. அதில் 4,000க்கும் அதிகமானோர் இருந்தனர். அதில் 300 சிப்பந்திகள் இந்தியர்கள். 300ல் 10 பேர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த விபத்தில் இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர். கப்பலில் இருந்து 201 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர், ஒரு இந்தியர், 2 அமெரிக்கர்கள் உள்பட 15 பேரைக் காணவில்லை என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில் மீட்கப்பட்ட இந்தியர்கள் அனைவரும் பத்திரமான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார். சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று மீட்பு பணியில் ஈடுபடுமாறு இத்தாலிக்கான இந்திய தூதர் தேபபத்ரா சாஹாவுக்கு கிருஷ்ணா உத்தரவிட்டுள்ளார். 2 இந்திய தூதரக அதிகாரிகள் ஏற்கனவே மீட்பு பணி நடக்கும் இடத்தை அடைந்துள்ளனர்.
இதற்கிடையே மூழ்கும் கப்பலில் இருந்த 300 இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களில் யாரும் உயிர் இழக்கவில்லை என்றும் சாஹா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
கப்பலில் இருக்கும் இந்தியர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எந்த இந்தியரும் இறக்கவில்லை. மீட்கப்பட்டவர்களின் விருப்பத்திற்கேற்ப அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மீட்புப் பணி முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications