சென்னை, நெல்லையில் 2 இளைஞர்கள் வெட்டிக் கொலை
சென்னை: பொங்கல் பண்டிகை அன்று ஏற்பட்ட தகராறில் சென்னையில் ஒருவரும், நெல்லையில் ஒருவரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் நேற்று பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னை திரிசூலத்தை அடுத்த மங்கள விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார்(22). அதே பகுதியில் கூலித் தொழிலாளராக பணியாற்றி வந்தார். அவர் பொங்கல் அன்று நண்பர்களுடன் குடித்துவிட்டு சீட்டு விளையாடி உள்ளார்.
அப்போது முத்துக்குமாருக்கும், நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, மோதலாக மாறியது. அப்போது போதையில் இருந்த நண்பர்கள், முத்துக்குமாரை தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.
இந்த நிலையில் மங்கள விநாயகர் கோவில் தெருவில் வாலிபர் ஒருவர் உடல் முழுவதும் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடப்பதாக பல்லாவரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் இறந்தது முத்துக்குமார் என்பது தெரிய வந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லையில் கொலை:
சென்னையில் நடந்தது போல நெல்லையில் 2 தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் வாலிபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் தாழையூத்தை அடுத்த ராஜவல்லிபுரத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மதியம் 12.30 மணி அளவில் 2 தரப்பினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள், இன்னொரு தரப்பைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபரை வெட்டிக் கொலை செய்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.