நெல்லை சந்திப்பு ஐஓபி லாக்கரில் வைத்திருந்த 256 பவுன் நகை மாயம்:காங். நிர்வாகி புகார்
நெல்லை: நெல்லை சந்திப்பில் உள்ள இந்தியன் ஓவர்சீ்ஸ் வங்கி லாக்கரில் வைத்திருந்த 256 பவுன் நகைகள் மாயமானதாக காங்கிரஸ் நிர்வாகி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை பெருமாள் கீழ ரதவீதியைச் சேர்ந்தவர் வேணுகோபால். மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொது செயலாளரான அவர் நெல்லை சந்திப்பில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி லாக்கரில் நகைகள் வைத்திருந்தார். பொங்கல் பண்டிகையையொட்டி நகைகளை எடுக்க வங்கிக்கு சென்றார். வங்கி மேலாளரிடம் இருக்கும் மாஸ்டர் கீயின் உதவியோடு லாக்கரை திறந்தபோது அங்கு நகைகள் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வங்கி நிர்வாகத்திடம் முறையிட்டார். அவர்கள் உரிய பதில் தெரிவிக்காததால் இரவு வரை அங்கேயே காத்திருந்தார். இருப்பினும் பலனில்லை.
இதனால் வேணுகோபால் குடும்பத்தினர் கதறி அழுதனர். வங்கி நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்து அவர்கள் வங்கி முன் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதற்கிடையே அவரது உறவினர்களும், காங்கிரஸ்காரர்களும் அங்கு வந்து விளக்கம் கேட்டு தகராறு செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த உதவி கமிஷனர்கள் ராஜ்குமார், ஸ்டான்லி ஜோன்ஸ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஜெபராஜ், பர்ணபாஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர் வந்து வங்கி அதிகாரிகள் மற்றும் வேணுகோபாலிடம் விசாரணை நடத்தினர்.
இது குறித்து வேணுகோபால் போலீசாரிடம் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது,
நெல்லை சந்திப்பு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடந்த 2009ம் ஆண்டு முதல் லாக்கரில் நகைகள் வைத்து வருகிறேன். வரும் ஏப்ரல் மாதம் எனது மகளின்திருமணத்தை முன்னிட்டு வங்கி லாக்கரில் கல் வளையல், ஆரம்செயின், கல் நெக்லஸ், ரிங்ஸ், பிரேஸ்லெட், காசுமாலை உள்பட ரூ.50 லட்சம் மதிப்பிலான 256 பவுன் நகைகள் வைத்திருந்தேன். கடந்த நவம்பர் மாதம் 15ம் தேதி லாக்கரை திறந்தபோது நகைகள் இருந்தன. மீண்டும் இன்று லாக்கரை திறந்தபோது நகைகள் இல்லை. லாக்கரை யாரோ திருட்டுத்தனமாக திறந்து நகைகளை எடுத்துச் சென்றுள்ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
நெல்லை சந்திப்பு இந்தியன் ஓவர்சீ்ஸ் வங்கிலாக்கரில் நகைகள் மாயமாகியுள்ளது இது இரண்டாவது தடவையாகும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இதேபோன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணனின் லாக்கரில் இருந்து லட்சக்கணக்கான நகைகள் மாயமானது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications