கோபியில் குழந்தை கழுத்து அறுத்து கொலை - நரபலியா என்று போலீஸ் விசாரணை
கோபி: கோபியில் பச்சளம் குழந்தை கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு, சாக்கடை கால்வாயில் கிடந்தது. நரபலி கொடுப்பதற்காக குழந்தை கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டதா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஆண்டவர் வீதியில் நேற்றுமுன்தினம் காலை 8.30 மணியளவில் சிறுவர்கள் பம்பரம் விட்டு விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் விளையாடிய பம்பரம் சாலையோரத்தில் உள்ள சாக்கடையில் தவறி விழுந்தது.
பம்பரத்தை எடுக்க சிறுவர்கள் சாக்கடையில் எட்டி பார்த்தனர். அப்போது சாக்கடைக்குள் ஒரு குழந்தையின் தலையும், முண்டமும் தனித்தனியாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்த தகவல் அறிந்த அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கோபி இன்ஸ்பெக்டர் இளங்கோவன், போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சாக்கடைக்குள் கிடந்த குழந்தையின் உடலையும், தலையும் மீட்டார். கொலை செய்யப்பட்ட பெண் குழந்தையின் தலையை வெட்டி துண்டித்த பிறகு, குரல் வளையை அறுக்கப்பட்டது தெரிய வந்தது.
பிறந்து 7 நாட்கள் மட்டுமே ஆன நிலையில், குழந்தையின் தொப்புள் கொடி காயம் காயாமல் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். கொலை குறித்து விசாரிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தர்ராஜன் மேற்பார்வையில் போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
குழந்தை கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதால் நரபலிக்காக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் குழந்தையின் பெற்றோர் யார், கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்காக சுற்றுப்புறத்தில் உள்ள மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளின் விபரங்களை தனிப்படை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
மேலும் கொலையுண்ட குழந்தையின் உறுப்புகள் டி.என்.ஏ. பரிசோதனைக்கு கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தர்ராஜன் தெரிவித்தார். பெண் குழந்தை கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.