ரூ.1.50 கோடியில் மதுரை மீனாட்சி அம்மனுக்கு புதிய வைர கிரீடம்
மதுரை: ரூ.1.50 கோடி மதிப்பில் மதுரை மீனாட்சி அம்மனின் மூலவர் சிலைக்கு புதிய வைர கிரீடம் வரும் 19ம் தேதி அணிவிக்கப்பட உள்ளது.
மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் மிகவும் பிரபலமானது. மன்னர்களின் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவிலில் உள்ள மூலவர் சிலைக்கு ஒரு பழமையான வைர கிரீடம் உள்ளது. தீபாவளி, தை அமாவாசை உள்ளிட்ட முக்கிய நாட்களில் மட்டுமே அந்த வைர கிரீடம் அணிவிக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள மூலவர் சிலைக்கு, தற்போது மதுரை உபயதாரர் ஒருவர் புதிய வைர கிரீடம் ஒன்றை வழங்க உள்ளார். ரூ.1.50 கோடி மதிப்புள்ள வைர கிரீடம் வரும் 19ம் தேதி கோவிலுக்கு வழங்கப்பட்டு, அன்றே மூலவர் சிலைக்கு அணிவிக்கப்படும்.
முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் 20ம் தேதி மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், பிரியாவிடை உற்சவர்களுக்கு தங்கம், நவரத்னகற்கள் பதித்த, ரூ.55 லட்சம் மதிப்புள்ள 1.75 கிலோ எடையுள்ள, கீரிடங்களை உபயதாரர்கள் வழங்கினார்.