பாபநாசத்தில் பிரியாணிக்குள் மதுபாட்டில்கள்: மடக்கிப் பிடித்த போலீசார்
நெல்லை: பாபநாசத்திற்கு காணும் பொங்கல் கொண்டாட சென்ற சுற்றுலா பயணிகள் வேனில் பிரியாணியில் மது பாட்டில்களை பதுக்கி எடுத்து சென்றனர். இதை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர்.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் காணும் பொங்கலன்று பாபநாசத்தில் உள்ள அகஸ்தியர் அருவி, பாணதீர்த்த அருவி, பாபநாசம் கோயில், தலையணை போன்ற இடங்களுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அவர்களுக்கு வனத்துறையினர் பல கட்டுபாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக மது பாட்டில்களை மலைக்கு எடுத்து செல்லக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர். அதையும் மீறி மதுபாட்டில்கள் கடத்தப்படுவது உண்டு. இதை முற்றிலும் தடுக்கும் வகையில் இன்று வனத்துறையினரும், போலீசாரும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இன்று காலையில் பாபநாசம் வனத்துறை சோதனைச்சாவடியில் முண்டந்துறை புலிகள் காப்பக இணை இயக்குனர் வெங்கடேஷ், வனச்சரகர் இளங்கோ, விகேபுரம் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் போலீசார் வாகனங்களை சோதனையிட்டனர். அப்போது சுற்றுலா பயணிகள் சென்ற வேனில் பிரியாணியில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சோதனையில் 100க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு வேனில் மட்டுமே 24 பாட்டில்கள் இருந்தது. இன்று காலை 9 மணி வரை மலைக்கு 200க்கும் மேற்பட்ட வேன், கார்கள் சென்றுள்ளன. சோதனை போட்ட ஒரு சிலமணி நேரங்களில் மட்டும் இத்தனை பாட்டில்கள் பிடிபட்டுள்ளன. குறிப்பாக வேனில் வந்தவர்கள் தான் அதிக அளவில் பிரியாணியில் மறைத்து வைத்து கொண்டு வந்தனர். அவற்றை பறிமுதல் செய்த போலீசார் பாட்டில்களை அங்கேயே உடைத்து அழித்தனர். இதே போல் பிளாஸ்டிக் கேரி பேக்குகளையும் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications