காணும் பொங்கல்: மெரீனாவில் குளிக்க தடை-போலீசார் குவிப்பு
சென்னை: சென்னையில் காணும் பொங்கல் அன்று மெரீனாவில் மக்கள் கூட்டம் திரண்டு வருவார்கள் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி யாரும் குளிக்காமல் இருக்க 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
சென்னையில் உள்ள சுற்றுதளங்களில் மெரீனா கடற்கரையும் ஒன்று. இதனால் சென்னை வாசிகளும், வெளியூர் சுற்றுலா பயணிகளும் மெரீனா கடற்கரைக்கு அதிகளவில் வந்து செல்கின்றனர். வார இறுதி நாட்கள், பண்டிகை நாட்களில் மெரீனாவுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது.
மெரீனா கடற்கரைக்கு வரும் மக்கள் கடலில் குளிக்கும் போது, கடல் அலையில் சிக்கி பலியாவது அதிகரித்து வருகின்றது. இதனை தடுக்கும் வகையில் மெரீனாவிற்கு வருவோர் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் தடையை மீறி கடலில் குளிக்கின்றனர்.
இந்த நிலையில் காணும் பொங்கலை முன்னிட்டு, மெரீனாவிற்கு அதிகளவில் மக்கள் வருவார்கள். அப்போது மக்கள் கடலில் இறங்கி குளித்து, பலியாகும் அபாயம் உள்ளதால், போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர்.
கடலில் இறங்கி குளிக்காமல் இருக்க சவுக்கு கம்பு அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். மேலும் கடற்கரை ஓரத்தில் குதிரைப் படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள சவுக்கு கம்பை தாண்டி கடலில் குளிக்க செல்வோரை தடுத்து அறிவுரை கூறி அனுப்ப, 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தீயணைப்பு வீரர்களும் அவசரக் கால மீட்பு படகுகளுடன் தயார் நிலையில் முகாமிட்டு உள்ளனர்.
தீயணைப்பு வீரர்களுக்கு உதவியாக மீனவர்கள் சிலரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடற்கரையில் குழந்தைகள் காணாமல் போனால் உதவும் வகையில் போலீஸ் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள சுற்றுலா தலங்கள், முட்டுக்காடு, மகாபலிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளதாக போலீசார்தெரிவித்தனர். கூடுதல் பாதுகாப்பாக கடற்படை ஹெலிகாப்டரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.
காணும் பொங்கலையொட்டி மக்களின் போக்குவரத்து வசதிக்காக, அண்ணா சதுக்கம், பெசன்ட் நகர், முட்டுக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க, மாநகர போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications