களை கட்டிய மாட்டுப்பொங்கல் – கால்நடைகளுக்கு மரியாதை
சென்னை: தமிழ்நாடு முழுவதும் மாட்டுப்பொங்கல் விழா களை கட்டியுள்ளது. கிராமங்களில் விவசாயிகள் மாட்டுத்தொழுவங்களில் பொங்கல் வைத்து கால்நடைகளுக்கு நன்றி தெரிவித்தனர்.
பொங்கல் பண்டிகையின் மிக முக்கிய விழாவாக கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவிற்கும், விவசாயத்திற்கு உதவி புரியும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும் தைப் பொங்களின் மறுநாள் மாட்டுப்பொங்கல் விழா பாரம்பரியமாக கொண்டாடப்படுகிறது.
கால்நடைகளுக்கு அலங்காரம்
மாட்டுப்பொங்கலை ஒட்டி இன்று அதிகாலையிலேயே விவசாயிகள் மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து அலங்கரித்தனர். பின்னர் ஆண்டுதோறும் தங்களின் வாழ்வாதாரத்திற்காக உழைக்கும் கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்து அவற்றின் கொம்புகளுக்கு வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டியும், புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும், திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் அலங்கரித்துள்ளனர்.
பொங்கல் வைத்து ஆராதனை
விவசாயத்திற்கு பயன் படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல சுத்தம் செய்து அலங்கரித்த விவசாயிகள், விளைநிலங்களில் விளைந்த பொருட்களை மிகப்பெரிய தட்டுக்களில் வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் படைத்து மாட்டுத் தொழுவத்தில் பொங்கலிட்டனர். இதனையடுத்து பசு, காளை, எருமை, ஆடுகள் என அனைத்து கால்நடைகளுக்கும் தீபாராதனை காட்டி பொங்கல், பழம் கொடுத்து பூஜைகளை நிறைவு செய்தனர்.
மாட்டுப்பொங்கலை ஒட்டி பல்வேறு கிராமங்களில் மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டுக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications