மதுரையில் கோயில் கோயிலாக வலம் வந்து தரிசனம் செய்த எதியூரப்பா!
நில மோசடி குற்றச்சாட்டுகள் காரணமாக கைதாகி முதல்வர் பதவியை இழந்த எதியூரப்பா, மீண்டும் முதல்வர் பதவியை பிடிக்க முயன்று வருகிறார். இதை பாஜக தலைமை ஏற்கவில்லை. இதையடுத்து கட்சியின் மாநிலத் தலைவர் பதவியைக் கோரி தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். இதையும் கட்சித் தலைமை ஏற்க மறுத்து வருகிறது.
இதையடுத்து இன்று முதல் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார். தனக்கு தனிப்பட்ட முறையில் ஆதரவு திரட்டவே அவர் இந்த பயணத்தை மேற்கொள்வதாக பாஜக தலைமை கருதுகிறது.
இந் நிலையில் நேற்று பெங்களூரில் இருந்து சிறப்பு விமானத்தில் மதுரை வந்த அவர், மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், ஒத்தக்கடை யோகநரசிங்க பெருமாள் கோயில் மற்றும் திருமோகூர் சக்கரத்தாழ்வார்-காளமேகப் பெருமாள் கோயிலில் தரிசனம் செய்தார்.
அவர் சென்ற இடமெல்லாம் பத்திரிகையாளர்களும் அவரைத் தொடர்ந்தனர். ஆனால், நிருபர்களின் எந்தக் கேள்விக்கும் அவர் பதில் தர மறுத்துவிட்டார்.
மதுரை சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு மாலையில் அவர் பெங்களூர் திரும்பினார்.