முல்லைப் பெரியாறு விவகாரம்-புதிய அணை கோரி கேரளாவில் நாளை பந்த்
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டக் கோரி கேரளாவில் நாளை மாநிலம் தழுவிய பந்த் நடத்தப்படவுள்ளது.
புதிய அணை கட்டக் கோரி இடுக்கி மாவட்டம் வண்டிபெரியார் மற்றும் சப்பாத்து ஆகிய பகுதிகளில் போராட்டக் குழு சார்பில் கேரளாவில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் நாளை கேரளாவில் மாநில அளவில் பந்த் நடத்த போவதாக முல்லை பெரியாறு போராட்ட குழு அறிவித்துள்ளது.
முல்லை பெரியாறு பிரச்சனைக்கு ஒரு மாதத்தில் தீர்வு காணப்படும் என்று கூறி மத்திய அரசுஏமாற்றி விட்டதால் இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதாக போராட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த் நடத்தப்படுகிறது. இதனால் கேரளாவில் நாளை அரசு பஸ், தனியார் பஸ், டாக்சி, ஆட்டோ உள்பட வாகனங்கள் எதுவும் ஓடாது. கடைகளும் அடைக்கப்பட்டிருக்கும்.
இதற்கிடையே முல்லை பெரியாறு போராட்டகுழு நடத்தும் இந்த போராட்டத்திற்கு கேரளாவை சேர்ந்த எந்த அரசியல் கட்சிகளும் இதுவரை ஆதரவு தெரிவிக்காமல் இருந்து வந்தது. கேஎம் மாணி தலைமையிலான கேரளா காங் (எம்) நாளைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கேரளா காங்கிரஸ் (எம்) கட்சி மூத்த தலைவரும், கேரள நீர்பாசனததுறை அமைச்சருமான ஜோசப் கூறுகையில், முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக பிரச்சனைக்கு ஒரு மாதத்தில் சுமூக தீர்வு காணப்படும் என்று மத்திய அரசு கூறியிருந்தது.
இதனால் கேரளா காங் (எம்) நடத்தி வந்த போராட்டங்களை நிறுத்தி வைத்தது. ஆனால் கடந்த 15ம் தேதியுடன் மத்திய அரசு கூறிய 1 மாதம் நிறைவு பெற்று விட்டது. எனவே தான் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட கேரளா காங் (எம்) கட்சி முடிவெடுத்தது. முல்லை பெரியாறு போராட்ட குழு நாளை நடத்தும் பந்துக்கு ஆதரவு தெரிவிக்க தீர்மானிக்கப்பட்டது. முல்லை பெரியாறு பிரச்சனைக்கு சுமுக தீர்வு காண மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.