அழகிரி வெற்றியை எதிர்த்து வழக்கு: சிபிஎம் 'டம்மி' வேட்பாளருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
டெல்லி: 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மத்திய அமைச்சர் முக அழகிரி வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட மனு செய்திருந்த வேட்பாளரான லாசரிடம் விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரி மதுரை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை எதி்ர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பி. மோகன் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதையடுத்து தேர்தலில் அழகிரி முறைகேடு செய்து வெற்றி பெற்றதாகக் கூறி அவரது வெற்றியை ரத்து செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மோகன் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மோகன் மரணம் அடைந்தார். இதையடுத்து அதே கட்சியின் டம்மி வேட்பாளரான லாசர் என்பவர் அந்த வழக்கை தொடர்ந்து நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. 2009 லோக்சபா தேர்தலில் லாசர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் கட்சி மோகனுக்கு சீட் கொடுத்ததால் அவர் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கை தொடர்ந்து நடத்த லாசருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததை எதிர்த்து அழகிரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர். எம். லோதா மற்றும் ஹெச்.எல். கோகலே அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து விளக்கம் அளிக்குமாறு லாசருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications