வரிகள் கடும் உயர்வு... இன்னும் 'காஸ்ட்லியாகிறது' தங்கம்-வெள்ளி!

உலகஅளவில், தங்கத்தை அதிகஅளவில் இறக்குமதி செய்யும், பயன்படுத்தும் நாடு, இந்தியாதான். இங்குதான் தங்கத்தின் விலை எந்த அளவு உயர்ந்தாலும் கவலைப்படாமல் வாங்கித் தள்ளுகிறார்கள். வாழ்க்கையில் தங்கத்துக்கு அத்தனை முக்கியத்துவம் தருபவர்கள் இந்தியர், குறிப்பாக தமிழர்கள்.
தங்கம், வெள்ளி மீது ஒரு குறிப்பிட்ட தொகை, இறக்குமதி வரியாகவும், உற்பத்தி வரியாகவும் இதுவரை வசூலிக்கப்பட்டு வருகிறது.
அதாவது, 10 கிராம் தங்கத்துக்கு இறக்குமதி வரியாக 300 ரூபாயும், உற்பத்தி வரியாக 200 ரூபாயும் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதுபோல், ஒரு கிலோ வெள்ளி மீதான இறக்குமதி வரியாக 1,500 ரூபாயும், உற்பத்தி வரியாக ஆயிரம் ரூபாயும் வசூலிக்கப்பட்டு வருகிறது.
வரிகளில் அதிரடி மாற்றம்
இந்நிலையில், இந்த வரி விகிதங்களை மத்திய அரசு முற்றிலும் மாற்றி அமைத்துள்ளது. அதாவது, தங்கம், வெள்ளியின் விலை மதிப்பில், குறிப்பிட்ட சதவீதத்தை வரியாக செலுத்த வேண்டும்.
அதன்படி, தங்கத்துக்கு 2 சதவீத இறக்குமதி வரியும், 1.5 சதவீத உற்பத்தி வரியும் விதிக்கப்படுகிறது. வெள்ளிக்கு 6 சதவீத இறக்குமதி வரியும், 4 சதவீத உற்பத்தி வரியும் விதிக்கப்படுகிறது. வைரத்துக்கும் 2 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.
இந்த புதிய வரிவிகிதங்கள், நேற்று முதல் அமலுக்கு வந்தன. இதுதொடர்பான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசுக்கு ரூ 600 கோடி வருவாய்
இதுதொடர்பாக, மத்திய உற்பத்தி மற்றும் சுங்க வரிகள் வாரிய தலைவர் எஸ்.கே.கோயல் கூறுகையில், "தங்கம், வெள்ளி மீதான தற்போதைய வரிகள், நான்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டவை. அதன்பிறகு, தங்கம், வெள்ளியின் விலை கணிசமாக உயர்ந்து விட்டது. எனவே, சந்தை விலைக்கு ஏற்ப வரியை கொண்டு வரும் நோக்கத்தில், வரிவிகிதங்கள் மாற்றப்பட்டுள்ளன," என்றார்.
இந்த புதிய வரிவிகிதங்கள் மூலம், நடப்பு நிதியாண்டில், மீதம் உள்ள ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய 3 மாதங்களில் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.600 கோடி வருவாய் கிடைக்கும் என்று மத்திய நிதி அமைச்சகம் கணித்துள்ளது.
அதே சமயத்தில், மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டவுடன், நகை வர்த்தக நிறுவனங்களின் பங்குகள், பங்கு வர்த்தகத்தில் கணிசமாக சரிந்தன.
விலை உயரும் அபாயம்
தங்கத்துக்கு 2 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படுவதால், 10 கிராம் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி ரூ.570 ஆக இருக்கும். இது, தற்போதைய வரியை (ரூ.300) போல் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு ஆகும். அதுபோல், வெள்ளி மீதான இறக்குமதி வரி ரூ.3 ஆயிரம் ஆக இருக்கும். இது, தற்போதைய வரியை (ரூ.1,500) போல் இரண்டு மடங்கு ஆகும்.
எனவே, இதற்கேற்றாற்போல், தங்கம், வெள்ளியின் விலையும் உயரும். மேலும், தங்கம், வெள்ளியின் விலை உயரும்போதெல்லாம், அதற்கேற்ப வரியாக செலுத்தப்படும் தொகையும் உயரும் என்பதால், தங்கம், வெள்ளியின் விலை உயர்ந்து கொண்டே செல்லும் அபாயம் உள்ளது. அந்தஸ்தை தங்கத்தால் அளவிடும் நடுத்தர வர்க்க மக்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications