ராணுவ தளபதி வி.கே.சிங்குக்கு கட்டாய விடுமுறை?: மத்திய அரசு திட்டம்
டெல்லி: வயது பிரச்சனை தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள இந்திய தலைமை ராணுவ தளபதிக்கு கட்டாய விடுமுறை அளிப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
ராணுவ தலைமைத் தளபதியாக பதவி வகித்து வருபவர், வி.கே.சிங் என்ற விஜயகுமார் சிங்கின் மெட்ரிகுலேஷன் சான்றிதழில், அவரது பிறந்த தேதி 1951ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், ராணுவப் பணிக்காக அவர் மத்திய பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி நடத்திய ராணுவ அகாடமி தேர்வு எழுதியபோது வி.கே.சிங்கின் பிறந்த தேதி மே 10, 1950ம் ஆண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தேதியின்படி கணக்கிட்டால் வருகிற மே 31ம் தேதி அன்று வி.கே.சிங் ஓய்வு பெற வேண்டும்.
ஆனால், தனது பிறந்த தேதி 51ம் ஆண்டு தான் என்று கூறி வரும் சிங், ஓய்வு பெற மறுத்து வருகிறார். இதனால் அடுத்த ராணுவ தளபதியை அறிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில், தங்களை நீதிமன்றத்துக்கு இழுத்த வி.கே.சிங் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு யோசித்து வருகிறது.
நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை கட்டாய விடுப்பில் போகச் செய்வது அல்லது ராஜினாமா செய்ய வைப்பது ஆகிய திட்டங்கள் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிகிறது.
அதே நேரத்தில் அவரை பதவி நீக்கம் செய்வதில்லை என்ற முடிவிலும் மத்திய அரசு உள்ளது. வி.கே.சிங்க்கு அடுத்த சீனியரான கிழக்கு மண்டல ராணுவ தளபதி லெப்டினண்ட் ஜெனரல் பிக்ரம் சிங்கை அடுத்த ராணுவ தலைமை தளபதியாக தேர்வு செய்யவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications