சாந்தவேலு மரணம் விபத்தாம்!-கேரள அரசு கூறுகிறது
திருவனந்தபுரம்: சென்னையைச் சேர்ந்த சாந்தவேலுவின் மரணம் தவிர்க்க முடியாத மரணமே, திட்டமிட்ட செயல் அல்ல என்று கேரள அரசு விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து கேரள முதலமைச்சரின் அலுவலக செயலாளர் பி.டி. சாக்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை திருவேற்காட்டை சேர்ந்த சாந்தவேலு, சபரிமலைக்கு செல்லும் வழியில் கடந்த 9ம் தேதி அன்று கரிமலா என்ற இடத்தில் உள்ள டீக்கடையில் இருந்த பாய்லர் இவர் மீது விழுந்ததில் சுடு நீரால் காயமடைந்தார்.
சாந்தவேலுவிடம் இருந்த ஈரமான ரூபாய் தாள்களை பாய்லரில் ஒட்டி காய வைத்தபோது அந்த பாய்லர் இருந்த அடுப்பு உடைந்து விட்டது.
வெண்ணீரால் பாதிக்கப்பட்ட சாந்தவேலுவை உடனே அருகில் உள்ள கரிமலா மருத்துவ முதலுதவி மையத்துக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து பம்பாவில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சாந்தவேலு, 42 சதவீதம் தீக்காயம் அடைந்ததால் அவரை கோட்டையத்திலுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 10ம் தேதி அன்று சாந்தவேலுவின் சகோதரர், கோட்டையம் மருத்துவமனைக்கு வந்து, அங்கிருந்த மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இது தொடர்பாக சாந்தவேலுவின் சகோதரர் மருத்துவமனை நிர்வாகத்திடம் எழுத்துபூர்வமான கடிதமும் கொடுத்துள்ளார். எனவே, சாந்தவேலுவின் மரணம் தவிர்க்க முடியாத மரணம் தானே தவிர, திட்டமிட்ட செயல் அல்ல.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications