கணவர் இறந்த சோகத்தில் மகளைக் கொன்று கேரள தேர்வாணைய அதிகாரி தற்கொலை
திருவனந்தபுரம்: கேரளாவில் கணவன் இறந்த சோகத்தில் மகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற தேர்வாணைய அதிகாரி தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரை பனச்சமூடு- பட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பத்மகுமார். மின்வாரிய ஊழியர். அவருடைய மனைவி ராஜஸ்ரீ (32). அவர் கேரள அரசு பணியாளர் தேர்வாணையத்தில் உயர் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். அவர்களின் ஒரே மகள் விஷ்ணு மாயா. பள்ளியில் படித்து வந்தாள்.
இந்நிலையில் கடந்த 40 நாட்களுக்கு முன்பு பைக்கில் அலுவலகம் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் பத்மகுமார் பரிதாபமாக உயிர் இழந்தார். இதனால் ரஜாஸ்ரீ மனமுடைந்தார். உறவினர்கள் அவரை என்ன தான் தேற்றினாலும் கணவரின் பிரிவை அவரால் தாங்கிக் கொள்ள முடியவி்ல்லை. யாருடனும் பேசாமல், மகளையும் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் முடங்கிக் கிடந்தார்.
இந்நிலையில் நேற்று காலை ராஜஸ்ரீ தனது மகளை பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு அலுவலகத்திற்கு சென்றார். ஆனால் சிறிது நேரத்திலேயே அலுவலகத்தில் இருந்து கிளம்பினார். மகளையும் பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றார். அங்கு தனது கணவரின் புகைப்படத்தை வணங்கினார். பின்னர் தன்னுடைய சகோதரியை செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் மறுமுனையில் யாரும் செல்போனை எடுக்கவில்லை.
இதையடுத்து குளிர்பானத்தில் விஷம் கலந்து மகள் மாயாவுக்கு கொடுத்தார். அதைக் குடித்த சிறுமி சிறிது நேரத்தில் நுரை தள்ளி துடிதுடித்து இறந்தார். அதன் பிறகு ராஜஸ்ரீ மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நீண்ட நேரமாக அவரது வீட்டு கதவு திறக்காமல் இருந்ததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். உடனே அவர்கள் இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்த போலீசார் அங்கு வந்து கதவை உடைத்து பார்த்த போது சிறுமி நுரை தள்ளிக் கிடந்ததார், ராஜஸ்ரீ தூக்கில் பிணமாகத் தொங்கினார். 2 உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications