முத்தமிழ்ப் பேரவை விழா: தமிழ் இசை பரவ ஆட்சியாளர்கள் உதவ வேண்டும்-கருணாநிதி
சென்னை: தமிழ் இசை பரவ, தமிழ் உணர்வு மலர ஆட்சியாளர்கள் உதவ வேண்டும் என்று முத்தமிழ்ப் பேரவையின் 34வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.
சென்னை முத்தமிழ்ப் பேரவையின் 34வது ஆண்டு விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரம், திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட திமுக தலைவர் கருணாநிதி பல்வேறு விருதுகளை வழங்கினார்.
விருது பெற்றவர்கள் விவரம் வருமாறு,
சுப. வீரபாண்டியனுக்கு இயல் செல்வம் விருது, நாதஸ்வர கலைஞர் எஸ்.ஆர்.ஜி.கே.கல்யாணசுந்தரத்துக்கு 'ராஜரத்னா' விருது, பாடகர் சஞ்சய் சுப்ரமணியத்துக்கு 'இசைச்செல்வம்' விருது, நாட்டிய கலைஞர் இந்திரா ராஜனுக்கு 'நாட்டிய செல்வம்' விருது, கபிலர்மலை தியாகராஜனுக்கு 'தவில் செல்வம்' விருது, குடந்தை ஏ.சரவணனுக்கு 'மிருதங்க செல்வம்' விருது
விழாவுக்கு முத்தமிழ்ப் பேரவையின் தலைவரும், புல்லாங்குழல் மேதையுமான என்.ரமணி முன்னிலை வகித்தார். பேரவை செயலாளர் வழுவூர் ரவி வரவேற்புரையாற்றினார்.
பின்னர் கருணாநிதி பேசியதாவது,
பேரவை துவங்கி 34 ஆண்டுகள் ஆகின்றன. பேரவையின் ஒவ்வொரு ஆண்டு விழாவிலும் கலந்து கொண்ட பெருமை பெற்றவன் நான். ஆனால் இந்த மாமன்றத்தில் இருந்த பல இசை மேதைகள் இன்று இல்லாதது எனக்கு பெரும் வேதனையாக உள்ளது. அவர்கள் இருந்தும் விழாவுக்கு வரவில்லை என்று நான் கூறவில்லை. இயற்கை அழைத்துக் கொண்டதால் அவர்கள் வரவில்லை. அவர்கள் எல்லாம் இந்த மன்றத்தை வளர்த்து நம்மிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் வகுத்த வழியில் இம்மன்றத்தை வளர்க்க தொடர்ந்து பாடுபடுவோம் என்று உறுதிமொழி எடுப்போம்.
இந்த முத்தமிழ்ப் பேரவைக்கென்று ஒரு கட்டிடம் வேண்டும் என்று நான் ஒவ்வொரு ஆண்டு விழாவிலும் கூறி வந்தேன். பல்வேறு கலைவிழாக்களை நடத்தும் இந்த பேரவைக்கு ஒரு இடம் வேண்டாமா என்று சொல்வேன். நீங்கள் இடம் கொடுத்தால் நாங்கள் கட்டிடத்தை கட்டிக் கொள்கிறோம் என்றனர். அதன்படி இம்மாமன்றத்தைக் கட்ட உதவினேன்.
இம்மாமன்றம் நாதசுர சக்கரவர்த்தி திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளையின் பெயரால் அமைக்கப்பட்டுள்ளது. அதைத் தான் நாங்கள் விரும்பினோம். நாதஸ்வரத்தில் பல அற்புதங்கள் செய்த ராஜரத்தினம் போன்றவர்கள் இன்று இல்லையே என்றாலும் விஞ்ஞான வளர்ச்சியில் அவரது இசை செல்வத்தை பாதுகாத்து அவரது இசையை, குரலைக் கேட்கும் வாய்ப்பை பெற்றுள்ளோம்.
இந்த அரங்க மேடையில் இசை அரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி படமும், இசை மாமேதை டி.என்.ராஜத்தினம் பிள்ளையின் படமும் வைக்கப்பட்டுள்ளன. அவர்களை நன்கு அறிந்த நாம், அவர்களுடன் பேசிப் பழகி அவர்களோடு சேர்ந்து கலை வளர்த்த நமக்கு இன்றைக்கு இந்த அரங்கில் அவர்களைப் பற்றி பேசும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்களுடைய புகழ்பாடும் மன்றமாக இந்த இடம் விளங்கும் என்ற நம்பிக்கையில் தான் நான் இந்த விழாவில் கலந்துகொண்டுள்ளேன்.
எனது நம்பிக்கைக்கு எந்தவிதமான ஊறும் வராமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு இங்கு வீற்றிருக்கும் உங்களுக்கு உள்ளது. தமிழகத்தில் தமிழ் இசை பரவ, தமிழ் உணர்வு மலர ஆட்சியாளர்கள் உதவ வேண்டும்.
தாய்மொழியைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு உள்ளது. அவர்களைத் தூண்டி அந்த பொறுப்பை நிறைவேற்ற வைக்கும் கடமை நம்மைப் போன்றவர்களுக்கு உள்ளது. அந்த போர்க்குணத்தை நாம் என்றைக்கும் விடமாட்டோம்.
தமிழிசை என்றால் தமிழில் புகழ் என்பது பொருள். இசை என்றால் புகழ் என்று பொருள். அந்த இசையை வீழ்த்தாமல் மென்மேலும் வளர்க்க இந்த மாமன்றம் பாடுபட வேண்டும். விருது பெற்ற அனைவரையும் வாழ்த்தி பாராட்டுகிறேன் என்றார்.
இதையடுத்து திமுக துணை பொதுச் செயலாளர் துரை முருகன் விருது பெற்றவர்களை வாழ்த்தி பேசினார். தொடர்ந்து விருது பெற்றவர்களின் சார்பில் சுப.வீரபாண்டியன், சஞ்சய் சுப்பிரமணியம் ஆகியோர் பேசினர். விழாவில் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், எம்.ஜி.ஆர்.கழக நிறுவனர் ஆர்.எம்.வீரப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக தஞ்சை டி.ஆர்.சீனிவாசன் நன்றி தெரிவித்தார்.
முன்னதாக திருக்காட்டுப்பள்ளி டி.ஜெ.சுப்பிரமணியம் நாதஸ்வர கச்சேரி மற்றும் ஜெயலட்சுமிசேகர்-எழிலரசி ஜோதிமணி வீணை கச்சேரியுடன் விழா துவங்கியது. இந்த விழா வரும் 21ம் தேதி வரை நடக்கிறது. இன்று மாலை 5 மணிக்கு திருவாரூர் எஸ்.கிரிஷ், 6.30 மணிக்கு கீதா ராஜசேகர் இசைநிகழ்ச்சிகளும், நாளை (19ம் தேதி) மாலை 5 மணிக்கு பவித்ரா மதுரம், 6.30 மணிக்கு டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் இசை நிகழ்ச்சிகளும், 20ம் தேதி மாலை 5 மணிக்கு டெல்லி மகாலட்சுமி, பி.உன்னிகிருஷ்ணன் குழுவினர் இசை நிகழ்ச்சிகளும், விழாவின் இறுதி நாளான 21ம் தேதி மாலை 6 மணிக்கு அமிர்தா வெங்கடேஷ் இசை நிகழ்ச்சியும் நடைபெறும்.












Click it and Unblock the Notifications