இருளர் பெண்கள் பலாத்கார வழக்கு: அரசுக்கு ஹைகோர்ட் கண்டனம்
சென்னை: இருளர் பெண்கள் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள போலீசாரை கைது செய்யாததற்கு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த மண்டபம் கிராமத்தைச் சேர்ந்த இருளர் இனப் பெண்கள் 5 பேரை திருக்கோவிலூர் போலீசார் பாலியல் பலாத்காரம் செய்தனர் என்று புகார் எழுந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் புகழேந்தி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 4ம் தேதி விசாரணைக்கு வந்தபோது இருளர் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த போலீசாரை கைது செய்யாதது குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசராணைக்கு வந்தபோது தமிழக அரசு விளக்கம் அளித்தது. அப்போது அரசு சார்பில் கூறப்பட்டதாவது,
இருளர் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு வாரத்திற்கு பிறகு தான் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் பலாத்காரம் நடந்ததை விசாரணை அதிகாரிகளால் உறுதிபடுத்த முடியவில்லை. அவர்கள் உறுதிபடுத்தாததால் தான் போலீசாரை கைது செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதயைடுத்து நீதிமன்றம் அரசுக்கு கண்டனம் தெரிவித்தது. மேலும் இந்த விவகாரம் குறித்து உள்துறைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அரசின் பதில் திருப்தியளிக்கவில்லை என்றால் இந்த வழக்கு சிபிஐ வசம் மாற்றப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.












Click it and Unblock the Notifications