மதிமுகவின் வைரத் தூண்களில் ஒன்று சாயந்துவிட்டது: மணச்சநல்லூர் நடராஜன் மறைவுக்கு வைகோ இரங்கல்
திருச்சி: திருச்சி மாவட்ட மதிமுக செயலாளர் மணச்சநல்லூர் நடராஜன் மறைவிற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மணிவிளக்குகளில் ஒன்று அணைந்து விட்டது. வலுவோடு கழகத்தைத் தாங்கி நின்ற வைரத் தூண்களில் ஒன்று சாய்ந்து விட்டது. ஆபத்துகளுக்கு அஞ்சாது களம்காணும் படைக்கருவிகளில் ஒன்றாக உறுதி தந்த வில் முறிந்துவிட்டது.
திருச்சி மாவட்ட மதிமுக செயலாளரும், ஆட்சிமன்றக் குழு உறுப்பினருமான எனது ஆருயிர் சகோதரர் மணச்சநல்லூர் நடராஜன் மாரடைப்பால் மறைந்துவிட்டார்.
பள்ளிப் பருவத்தில் அண்ணாவின் இயக்கத்தில் சேர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்மாமணியாய் திருச்சி மாவட்டத்தில் திகழ்ந்த லட்சிய வேங்கை நடராஜன் 1993 அக்டோபரில் என்னைத் தாங்கிப் பிடிக்கின்ற தாயின் மடியாக துன்பங்களை எதிர்கொள்ள உதவும் தோளாக கவலை போக்கும் மாமருந்தாக விளங்கி வந்தார். உங்கள் கரத்தைப் பற்றிக் கொண்டேன், என் மூச்சு அடங்கும் வரை உங்களோடு இருப்பேன் என்று அடிக்கடி சொல்வார்.
அவர் சொன்ன சொற்களை நினைக்கும் போது எல்லாம் துக்கம் என் நெஞ்சை அடைக்கிறது. உடம்பெல்லாம் பதறுகிறது.
லட்சோப லட்சம் கழகத் தொண்டர்கள் இதயமெல்லாம் நேசித்த என் உயிரினும் இனிய சகோதரர் இன்று இல்லையே என்பதை நினைத்துப் பார்க்கவே மனம் நடுங்குகிறது. அழுவதற்கும் என் கண்களுக்கு வலுவில்லை, உழைப்பில் உயர்ந்து நேர்மையில் சிகரமாக விளங்கிய இந்த மாவீரனை இழந்து துடிக்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications